சிவகாசியில் 4 வீடுகளில் திருடிய வாலிபர் கைது; 75 பவுன் நகை– ரூ.3¼ லட்சம் பறிமுதல்


சிவகாசியில் 4 வீடுகளில் திருடிய வாலிபர் கைது; 75 பவுன் நகை– ரூ.3¼ லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 5 Jan 2019 10:30 PM GMT (Updated: 5 Jan 2019 8:05 PM GMT)

சிவகாசி பகுதியில் 4 வீடுகளில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து 75 பவுன் நகைகள் மற்றும் ரூ.3¼ லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

சிவகாசி, 

சிவகாசி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் மற்றும் போலீசார் பூலாவூரணி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை மடக்கி சோதனையிட்டனர். அவர் இரும்பு கம்பிகள் மற்றும் கையுறை வைத்திருந்தது தெரியவந்தது.

இதை தொடர்ந்து அந்த வாலிபரை மாரனேரி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் மணியம்பட்டியை சேர்ந்த கருப்பையாவின் மகன் கருப்பசாமி என்கிற சின்ன கருப்பசாமி (வயது 35) என தெரியவந்தது. அவர் சிவகாசி மணியம்பட்டியில் மணிவண்ணன், ஜே. நகரில் ஸ்ரீபன்பிரேம்குமார், சித்துராஜபுரத்தில் உதயசங்கர் ஆகியோரின் வீடுகளிலும் ராஜதுரை நகரில் ஒரு வீட்டிலும் திருடியதை ஒப்புக்கொண்டார்.

போலீசார் அவரிடம் இருந்து ரூ.3 லட்சத்து 34 ஆயிரம், மற்றும் 75 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். சிவகாசி ஜே.நகரில் உள்ள ஸ்ரீபன்பிரேம்குமார் என்பவர் கார்களை வாங்கி விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் கார்களை விற்ற ரூ.6 லட்சத்து 30 ஆயிரத்தை வீட்டில் வைத்திருந்தார். அந்த பணத்தை திருடிய கருப்பசாமி பணத்தை தண்ணீராக செலவு செய்துள்ளார். இந்த நிலையில் தான் அவர் போலீசாரிடம் சிக்கி உள்ளார். பகல் நேரங்களில், பூட்டி இருக்கும் வீடுகளை கண்காணித்து வைத்து விட்டு, பின்னர் அந்த வீடுகளின் கதவுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. கைரேகைகள் பதிவாகாமல் இருக்க கையுறைகளை அணிந்து கொண்டதும் தெரியவந்தது. கருப்பசாமியை போலீசார் கைது செய்தனர்.


Next Story