அரசு மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஒப்புயர்வு மையம் அமைக்க அனுமதி அமைச்சர் தகவல்


அரசு மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஒப்புயர்வு மையம் அமைக்க அனுமதி அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 10 Jan 2019 11:15 PM GMT (Updated: 10 Jan 2019 8:16 PM GMT)

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஒப்புயர்வு மையம் அமைக்க அனுமதி கிடைத்து உள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் விடுதி நாள் விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, சங்கமம் 2019-க்கான கல்லூரி இதழினை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது;-

தமிழக சுகாதாரத்துறை இந்தியாவின் முதன்மை சுகாதாரத்துறையாக திகழ்ந்து வருகிறது. மேலும் இந்தியாவில் உள்ள பிற மாநில சுகாதாரத்துறைக்கு தமிழகம் முன்மாதிரி மாநிலமாக திகழ்கிறது. புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவ கல்வி பயின்று வரும் முதல் பேட்ஜ் மருத்துவ மாணவர்கள் 5 ஆண்டுகள் மருத்துவ படிப்பை முடித்து வெளியே செல்லும்போது சென்னை மருத்துவக்கல்லூரிக்கு இணையாக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி திகழும். புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரியின் சிறப்பான செயல்பாட்டால் 2-ம் ஆண்டிற்கான மருத்துவப்படிப்பிற்கு இந்திய மருத்துவ கவுன்சில் உடனடியாக அனுமதி வழங்கி உள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வரலாற்றில் முதல் முறையாக கடந்த ஓராண்டில் மட்டும் 44 சி.டி. ஸ்கேன், 18 எம்.ஆர்.ஐ. ஸ்கேன், 12 கேத்லேப், ரூ.24 கோடி மதிப்பீட்டில் 9 லீனியர் ஆக்சிலேட்டர், 500-க்கும் மேற்பட்ட டயாலிசிஸ் கருவிகள் போன்றவை மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டு உள்ளது. புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஒப்புயர்வு மையம் அமைக்க, டெல்லியில் உரிய அனுமதி கிடைத்து உள்ளது.

மருத்துவ மாணவர்களுக்கு விடுதியில் தங்கி பயில்வது மிகவும் முக்கியமாகும். எனவே மருத்துவ மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன், சிறந்த முறையில் மருத்துவ கல்வி பயின்று, வருங்காலத்தில் பொதுமக்களுக்கும், நாட்டுக்கும் அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவையாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story