கோட்டக்குப்பத்தில் குப்பை மேட்டில் பெண் பிணம்; கொலை செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை


கோட்டக்குப்பத்தில் குப்பை மேட்டில் பெண் பிணம்; கொலை செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 11 Jan 2019 9:45 PM GMT (Updated: 11 Jan 2019 8:43 PM GMT)

கோட்டக்குப்பத்தில் குப்பைமேட்டில் உடலில் காயங்களுடன் பெண் பிணம் கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

கோட்டக்குப்பம்,

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதி புதுச்சேரி மாநில எல்லையில் உள்ளது. கிழக்கு கடற்கரை சாலை கருவடிக்குப்பத்தில் இருந்து கோட்டக்குப்பத்துக்கு செல்லும் வழியில் ரோட்டின் இருபுறமும் காலி மனைகள் உள்ளன.

இங்கு குப்பைகள் மற்றும் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்பட்டு கிடக்கிறது. இதனால் அங்கு பன்றிகள் மேயந்து வருகின்றன. நேற்று காலை பன்றி மேய்ப்பவர்கள் அந்த குப்பைமேடு வழியாக சென்றனர்.

அப்போது அந்த பகுதியில் ஒரு பெரிய பாலித்தீன் தாளில் தலை மற்றும் உடல் சுற்றப்பட்டு கால்கள் மட்டும் வெளியே தெரிந்தபடி மனித உடல் கிடப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பாலித்தீன் தாளை பிரித்து பார்த்தனர்.

அப்போது சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அலங்கோலமாக பிணமாக கிடந்தார். உடலில் ரத்தக் காயங்கள் காணப்பட்டன.

இதைத்தொடர்ந்து அந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிக்குளத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக சந்தேக மரணமாக போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எப்படி செத்தார்? என விசாரித்து வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கோட்டக்குப்பம் அருகே சின்ன முதலியார் சாவடியில் நேற்றுமுன்தினம் மர்மமான முறையில் ஒரு பெண் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். தற்போது குப்பைமேட்டில் உடலில் காயங்களுடன் பெண் கிடந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story