நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி சேர வாய்ப்பு கனிமொழி எம்.பி. பேட்டி


நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி சேர வாய்ப்பு கனிமொழி எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 18 Jan 2019 10:00 PM GMT (Updated: 18 Jan 2019 1:35 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி சேர வாய்ப்பு உள்ளதாக கனிமொழி எம்.பி. கூறினார்.

தூத்துக்குடி, 

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி சேர வாய்ப்பு உள்ளதாக கனிமொழி எம்.பி. கூறினார்.

கனிமொழி எம்.பி.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊராட்சி சபை கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்.பி. நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அவரை தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி மற்றும் நிர்வாகிள் உற்சாகமாக வரவேற்றனர்.

அங்கு கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

குறை கூற இடமில்லை

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அமைச்சராக இருந்தபோது அவர் சென்று பார்க்காத பகுதிகள் எத்தனை என்று விரல்விட்டு எண்ணி விடலாம். அந்த அளவுக்கு அனைத்து பகுதிகளையும் நேரில் சென்று பார்த்து அங்கு இருக்கக்கூடிய மகளிர் சுயஉதவிக்குழுவுக்கு தானே வந்து நின்று சுழல்நிதி கொடுத்த அமைச்சர் மு.க.ஸ்டாலின். அவரை குறை கூற இடமில்லை. இந்த அளவுக்கு ஊராட்சி சபை கூட்டம் வெற்றிகரமாக நடந்து கொண்டு இருப்பதால் அவரை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அமைச்சர்கள் விமர்சனம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி சேருவதற்கான அத்தனை வாய்ப்பும் இருக்கிறது. இதனால் தான் அ.தி.மு.க. முன்னேறியவர்களுக்கான 10 சதவீதம் இடஒதுக்கீட்டை எதிர்த்து வாக்களிக்கவில்லை. இது அவர்கள் கூட்டணியை நோக்கி சென்ற கொண்டு இருக்கிறார்கள் என்பதை தெளிவாக காட்டுகிறது. தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமில்லை, தமிழ்நாடே இந்த ஆட்சி கலைய வேண்டும் என்றுதான் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறது.

டாஸ்மாக்

அ.தி.மு.க. அரசு மக்கள் பிரச்சினைகளை புரிந்து கொள்ளாமல், தான் எப்படி அதிகமாக சம்பாதிப்பது என்பதில்தான் ஆர்வமாக, ஈடுபாட்டோடு செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் மக்கள் பிரச்சினைகளை புரிந்து கொள்ளவே இல்லை. குறைந்தபட்சம் டாஸ்மாக் கடைகளையாவது குறைத்துக் கொண்டு வந்தால், வேண்டாம் என்று கூறும் பகுதியில் கடைகளை மூடி வந்தாலே, பல பிரச்சினை வளராமல் இருக்கும். ஆனால் அ.தி.மு.க. அரசு தொடர்ந்து இலக்கு வைத்து விற்பனையை அதிகரித்து வருகின்றனர். டாஸ்மாக் கடையை பொறுத்தவரை ஒரு கார்பரேட் நிறுவனம் போன்று அ.தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.

ஊராட்சி சபை கூட்டத்தில் பங்கேற்க எனக்கு தி.மு.க. தலைமை தூத்துக்குடியை ஒதுக்கி உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் நான் தூத்துக்குடியில் போட்டியிடுவது தொடர்பாக தி.மு.க. தலைவரிடம்தான் கேட்க வேண்டும். கட்சியின் தலைவர் எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு நான் கட்டுப்படுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story