பெயிண்டர் கொலை வழக்கில் 5 பேர் கைது


பெயிண்டர் கொலை வழக்கில் 5 பேர் கைது
x
தினத்தந்தி 22 Jan 2019 12:45 AM GMT (Updated: 22 Jan 2019 12:23 AM GMT)

புதுவை பெயிண்டர் கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி,

புதுவை முத்தியால்பேட்டை மாணிக்க முதலியார்தோட்டத்தை சேர்ந்த பெயிண்டரான பிரதீஷ் என்ற பிரகாஷ் (வயது 26) கடந்த 19–ந்தேதி தனது வீட்டருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் ஏற்கனவே அவர்களது வீட்டின் அருகே வசித்து வந்த சாமிப்பிள்ளைதோட்டம் அணைக்கரை மேட்டை சேர்ந்த முரளி மற்றும் அவரது கூட்டாளிகள் இந்த கொலையை செய்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர்களை பிடிக்க கொலையாளிகளை பிடிக்க சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தா, போலீஸ் சூப்பிரண்டு மாறன் ஆகியோரது உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர்கள் ஹேமச்சந்திரன், கார்த்திகேயன், சப்–இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ் (முத்தியால்பேட்டை), ரமேஷ் (சிறப்பு அதிரடிப்படை), கோவிந்தராஜன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

கொலையாளிகள் புதுவையை அடுத்த தமிழக பகுதியான பள்ளித்தென்னல் பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து அவர்களை போலீசார் அங்கு விரைந்து சென்று கைது செய்தனர். அப்போது முரளி, குஞ்சுமணி என்ற மணிகண்டனன், பிரதாப் மற்றும் விஜய் என்ற சங்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள், கார், மோட்டார் சைக்கிள் மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

போலீசாரின் விசாரணையில் பிரதீசுக்கும், முரளிக்கும் இடையே திருமண போஸ்டர் ஒட்டுவதில் பிரச்சினை இருந்து வந்துள்ளது. மேலும் பொங்கலை தொடர்ந்து கரிநாள் அன்றும் இவர்களுக்குகிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக முரளி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பிரதீசை கொலை செய்தது தெரியவந்தது. முரளி மீது லாஸ்பேட்டை காவல்நிலையத்தில் செயின் பறிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது.

குற்றவாளிகளை விரைந்து கைது செய்த போலீசாரை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தா, போலீஸ் சூப்பிரண்டு மாறன் ஆகியோர் பாராட்டினார்கள்.


Next Story