கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Jan 2019 11:00 PM GMT (Updated: 22 Jan 2019 8:36 PM GMT)

மயிலாடுதுறை மற்றும் சீர்காழியில் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறையில், அரசு ஊழியர்-ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், கடந்த 1.4.2003-க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனே வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்புற நூலகர்கள், கல்வி துறையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும். 3 ஆயிரத்து 500 தொடக்கப்பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கும் முடிவையும், மூடும் முடிவையும் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் தென்னரசு, ஊரக வளர்ச்சித்துறை வட்ட செயலாளர் வெங்கடேசன், அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் குருபிரசாத், மருந்தாளுனர் சங்க மாவட்ட செயலாளர் பரணிதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் பிரேமசந்திரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில செயலாளர் அசோக்குமார், முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகி காசிஇளங்கோவன், பட்டதாரி ஆசிரியர்கள் சங்க நிர்வாகி கோவிநடராஜன், ஆசிரியர் மன்ற நிர்வாகி செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் ஆசிரியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் துறையினர், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் கல்யாணரெங்கன் நன்றி கூறினார்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தால் சீர்காழி தாலுகா அலுவலகம், சீர்காழி ஊராட்சி ஒன்றியம், பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

Next Story