மதுபாரில் பயங்கரம்: கத்தியால் குத்தி கொத்தனார் கொலை


மதுபாரில் பயங்கரம்: கத்தியால் குத்தி கொத்தனார் கொலை
x
தினத்தந்தி 23 Jan 2019 12:20 AM GMT (Updated: 23 Jan 2019 12:20 AM GMT)

மதுபாரில் கொத்தனாரை கத்தியால் குத்தி கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி ஜீவானந்தபுரம் அன்னை பிரியதர்சினி வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் அருண் (வயது 29), கொத்தனார். இவருக்கு சுகந்தி என்ற மனைவியும், 1½ வயது பெண் குழந்தையும் உள்ளனர்.

அருண் நேற்று இரவு தனது நண்பர்கள் 2 பேருடன் கிழக்கு கடற்கரை சாலையில் மடுவுபேட் பகுதியில் உள்ள ஒரு மதுபாரில் மது குடித்துக்கொண்டு இருந்தார். அப்போது அதே மதுபாரில் அருகில் உள்ள மேஜையில் மர்ம நபர்கள் 3 பேர் அமர்ந்து மது குடித்துக்கொண்டு இருந்தனர்.

அருண் குடிபோதையில் இருந்த போது அவர்கள் 3 பேரும் எழுந்து அருணை நோக்கி நடந்து வந்தனர். அதில் 2 பேர் கையில் கைத்தியை வைத்திருந்தனர். அவர்கள் அருணின் முதுகில் கத்தியால் குத்த சென்றனர். இதனை பார்த்த உடன் அருணின் நண்பர்கள் 2 பேரும் கூச்சலிட்டனர்.

உடனே அருண் திரும்பி அவர்களை தடுக்க முயற்சி செய்தார். ஆனால் அவர்கள் அருணின் வயிற்றில் கத்தியால் குத்தினர். இதில் அவரது வயிற்றில் இருந்து ரத்தம் கொட்டியது. உடனே அருண் அவர்கள் 3 பேரையும் தள்ளி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

அப்போது மதுபாரில் மது குடித்துக்கொண்டு இருந்தவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர். உடனே மர்ம நபர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். சிறிது தூரம் ஓடிச்சென்ற அருண் அதற்கு மேல் செல்ல முடியாமல் அங்கேயே தரையில் அமர்ந்தார். அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இது பற்றிய தகவல் அறிந்ததும் வடக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன், லாஸ்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கொலை நடந்த இடத்தில் பதிவாகி இருந்த தடயங்களை பதிவு செய்தனர். அருணின் பிணத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் அருணுக்கும், அதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே அவர்கள் நேற்று இரவு அருணை பின்தொடர்ந்து வந்துள்ளனர்.

அவர் பாரில் மதுபானம் குடித்து விட்டு குடிபோதையில் இருந்த போது அவரை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. அவர் கொலைக்கு முன்விரோதம்தான் காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே கொலை நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீசார் குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story