மரக்காணம் பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.11 லட்சம் மோசடி செய்தவர் கைது


மரக்காணம் பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.11 லட்சம் மோசடி செய்தவர் கைது
x
தினத்தந்தி 30 Jan 2019 10:45 PM GMT (Updated: 30 Jan 2019 6:41 PM GMT)

மரக்காணம் பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.11 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம், 

மரக்காணம் சந்திகாப்பான் தெருவை சேர்ந்தவர் விமலதுரைநாதன் (வயது 40). இவருடைய மனைவி பியூலா (36). இவர்கள் இருவரும் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி வந்தனர்.

இவர்களிடம் மரக்காணம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் ரூ.30 ஆயிரம், ரூ.50 ஆயிரம், ரூ.1 லட்சம் ஆகிய சீட்டுகளில் சேர்ந்து மாதந்தோறும் பணம் செலுத்தி வந்தனர். ஆனால் சீட்டு பணம் முழுவதையும் கட்டி முடித்தபோதிலும் சம்பந்தப்பட்ட பொதுமக்களுக்கு பணத்தை கொடுக்காமல் விமலதுரைநாதனும், பியூலாவும் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரை நேரில் சந்தித்து ஏலச்சீட்டு நடத்தி தங்களிடம் பணத்தை மோசடி செய்த தம்பதி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மனு கொடுத்தனர். மனுவை பெற்ற அவர், இதுபற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் விமலதுரைநாதன், பியூலா ஆகியோர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பியூலாவை கடந்த மாதம் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள விமலதுரைநாதனை தேடி வந்தனர்.

இந்நிலையில் மரக்காணத்தில் இருந்து வெளியூருக்கு விமலதுரைநாதன் தப்பிச்செல்ல இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் நேற்று துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் வசந்தகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கோபாலகிருஷ்ணன், பிருந்தா ஆகியோர் தலைமையிலான போலீசார் மரக்காணத்திற்கு விரைந்து சென்று விமலதுரைநாதனை கைது செய்து, அவரை விழுப்புரம் பொருளாதார குற்றப் பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், விமலதுரைநாதன் ஏலச்சீட்டு நடத்தி மரக்காணம் பகுதியை சேர்ந்த பலரிடம் ரூ.11 லட்சம் வரை மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து விமலதுரைநாதனை போலீசார் விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Next Story