வாணியம்பாடியில் 1½ வயது பெண் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்து கொலை? - தாய், கள்ளக்காதலனிடம் போலீசார் விசாரணை


வாணியம்பாடியில் 1½ வயது பெண் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்து கொலை? - தாய், கள்ளக்காதலனிடம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 16 Feb 2019 11:01 PM GMT (Updated: 16 Feb 2019 11:07 PM GMT)

வாணியம்பாடியில் 1½ வயது பெண் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தாய் மற்றும் கள்ளக்காதலனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாணியம்பாடி,

வாணியம்பாடி நேதாஜி நகரை சேர்ந்தவர் சசிக்குமார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த நளினி என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் அவர்கள் பெங்களூருவில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 1½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்பட 3 குழந்தைகள் உள்ளது. பெங்களூருவில் நளினிக்கும், மற்றொருவருக்கும் தொடர்பு இருப்பதாக கருதி சசிக்குமார் தகராறு செய்து வந்தார்.

இந்தநிலையில் நளினியை வாணியம்பாடியில் உள்ள வீட்டிற்கு அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து நளினிக்கும், பல்லாவரத்தை சேர்ந்த முரளி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் வாணியம்பாடி நேதாஜி நகரில் வீட்டில் 1½ வயது பெண் குழந்தை விளையாடி கொண்டிருந்தது. அந்த குழந்தையை கள்ளக்காதலன் முரளி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. வெளியில் சென்ற நளினி வீட்டிற்கு வந்து பார்த்தபோது குழந்தை அலறல் சத்தம் கேட்டது. அங்கு சென்று பார்த்தபோது குழந்தை மயங்கி இருந்தது. உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. அங்கு குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.

இச்சம்பவம் தொடர்பாக வாணியம்பாடி டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முரளி மற்றும் நளினியை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் குழந்தை இறப்புக்கான காரணம் குறித்தும், பாலியல் தொல்லை காரணமாக குழந்தை இறந்ததா? அல்லது கொலை செய்யப்பட்டதா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story