இலங்கை கடற்படையை கண்டித்து பாம்பன் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கினர்


இலங்கை கடற்படையை கண்டித்து பாம்பன் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கினர்
x
தினத்தந்தி 23 Feb 2019 11:41 PM GMT (Updated: 23 Feb 2019 11:41 PM GMT)

இலங்கை கடற்படையை கண்டித்து பாம்பன் மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

ராமேசுவரம்,

தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும், விரட்டியடிக்கப்படுவதும், சிறைபிடித்து செல்லப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண மத்திய-மாநில அரசுகளை மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் பாம்பனில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற கொலம்பஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகையும், அவர் உள்பட 5 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். அவர்கள் மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இலங்கை கடற்படையை கண்டித்தும், சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து படகுகள் மற்றும் தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பாம்பன் மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளனர்.

இதனால் பாம்பன் கடல் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

Next Story