பெங்களூரு பூங்காவில் பரிதாபம்: மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் சாவு - மாநகராட்சி சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு


பெங்களூரு பூங்காவில் பரிதாபம்: மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் சாவு - மாநகராட்சி சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
x
தினத்தந்தி 25 Feb 2019 10:47 PM GMT (Updated: 25 Feb 2019 10:47 PM GMT)

பெங்களூரு பூங்காவில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிர் இழந்தார். மாநகராட்சி சார்பில் அவரது குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

பெங்களூரு பூங்காவில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிர் இழந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. அந்த மாணவனின் குடும்பத்திற்கு மாநகராட்சி சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என மேயர் கங்காம்பிகே அறிவித்துள்ளார்.

பெங்களூரு பானசவாடி, கம்மனஹள்ளி அருகே நியூ கிராப் கார்டன் பகுதியில் வசித்து வருபவர் நாகராஜ், கூலித் தொழிலாளி. இவரது மனைவி கவுரம்மா. இந்த தம்பதிக்கு உதய்குமார் (வயது 7) என்ற மகன் இருந்தான். இந்த சிறுவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் மாலையில் வீட்டின் அருகே உள்ள ராஜ்குமார் பூங்காவுக்கு உதய்குமார் விளையாடுவதற்காக சென்றிருந்தான்.

அப்போது வெளியே தெரியும் விதமாக கிடந்த இணைப்பு மின்சார வயரில் உதய்குமார் தெரியாமல் மிதித்து விட்டான். இதனால் அவனை மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது. இதனால் உடல் கருகி உயிருக்கு போராடிய உதய்குமாரை பூங்காவுக்கு வந்திருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உதய்குமார் பரிதாபமாக இறந்துவிட்டான்.

முன்னதாக இதுபற்றி அறிந்ததும் நாகராஜ், கவுரம்மா ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர். அங்கு தங்களது மகனின் உடலை கண்டு அவர்கள் கதறி அழுதார்கள். இதுபற்றி அறிந்ததும் சம்பவம் நடந்த பூங்காவுக்கு சென்று பானசவாடி போலீசார் விசாரணை நடத்தினார்கள். அந்த பூங்கா பராமரிப்பு இல்லாமல் இருந்துள்ளது. இதையடு்த்து, பூங்காவை புரனமைக்க மாநகராட்சி சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு இருந்தது. அதன்பேரில், அங்கு புதிதாக மின்விளக்குகள் அமைத்தல், மின்சார வயர்கள் பதித்தல் உள்ளிட்ட பணிகளை மின்வாரியம்(பெஸ்காம்) செய்து வந்துள்ளது.

அப்போது பழைய மின்வயர்களை அகற்றிவிட்டு புதிய மின்வயர்களை பதித்துள்ளனர். மேலும் மின்சார வயர்களை இணைத்த பகுதியில் சரியான பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளாமல் அப்படியே விட்டிருந்தனர். அந்த மின்வயர் மீது உதய் குமார் மிதித்ததால், அவனது உடலில் மின்சாரம் பாய்ந்து பலியானதும் தெரியவந்தது. இதுகுறித்து பானசவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில், மின்வாரிய அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால் தான் சிறுவன் மின்சாரம் தாக்கி பலியானதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு கூறினார்கள். இதையடுத்து, நேற்று காலையில் சம்பவம் நடந்த பூங்காவை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் மற்றும் மாநகராட்சி மேயர் கங்காம்பிகே பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் சிறுவனின் பெற்றோரை சந்தித்து அவர்கள் ஆறுதல் கூறினார்கள்.

பின்னர் மாநகராட்சி மேயர் கங்காம்பிகே நிருபர்களிடம் கூறியதாவது:-

பூங்காவில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலியான சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த துயரம் நடந்திருக்கக்கூடாது. 2016-ம் ஆண்டு வரை இந்த பூங்கா, பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதன்பிறகு, மாநகராட்சி வசம் வந்தது. தற்போது அந்த பூங்காவை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மின்சார வயர்களை சாி செய்யாமல் அப்படியே மின்வாரிய ஊழியர்கள் விட்டு சென்றதால் சிறுவன் பலியாகி உள்ளான். சிறுவனை இழந்து வாடும் குடும்பத்திற்கு மாநகராட்சி சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story