“அ.தி.மு.க. பேரம் பேசும் கூட்டணி” தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தாக்கு


“அ.தி.மு.க. பேரம் பேசும் கூட்டணி” தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தாக்கு
x
தினத்தந்தி 8 March 2019 11:30 PM GMT (Updated: 8 March 2019 11:31 PM GMT)

மதுரை சொக்கிக்குளம் பகுதியில் மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 8 மாவட்ட காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

மதுரை, மார்ச்.9-

காங்கிரஸ் கட்சி கன்னியாகுமரியில் மார்ச் 13-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறது. இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தை முன்னிட்டு மதுரை சொக்கிக்குளம் பகுதியில் மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 8 மாவட்ட காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

கூட்டத்தில் அகில இந்திய செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான சஞ்சய் தத், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன் செய்திருந்தார்.

முன்னதாக மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில், “பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. புலவாமா தாக்குதலை தொடர்ந்து இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலை அரசியலாக பார்க்க வில்லை. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்திலும் இது போன்ற ராணுவ தாக்குதல் நடந்தது. தமிழகத்தில் எங்களது கூட்டணி கொள்கை சார்ந்தது. அ.தி.மு.க. கூட்டணி பேரம் பேசும் கூட்டணி. இக்கூட்டணியை இளைஞர்களும், பொதுமக்களும் ஏற்க மாட்டார்கள். மதச்சார்பற்ற கொள்கையில் மட்டுமே அனைத்து மாநிலங்களிலும் மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளோம்.

தமிழகத்துக்கு ரூ.1,500 கோடி நிதி கேட்டபோது ரூ.3 ஆயிரம் கோடி மட்டும் ஒதுக்கினார் பிரதமர். அவருடன் ஒரே மேடையில் பங்கேற்ற அ.தி.மு.க., பா.ம.க. அந்த கோரிக்கையை வைக்கவில்லையே. ஒரு வேளை அப்படி இரு கட்சிகளும் கேட்டு இருந்தால் மாநில நலனில் அவர்களுக்கு அக்கறை இருக்கிறது என்று கூறலாம். எனவே எங்களது கூட்டணியே வெற்றி பெறும்.” என்றார்.

Next Story