மரத்தில் பிணமாக தொங்கிய கால்டாக்சி டிரைவர் அடித்து கொலையா? போலீசார் விசாரணை


மரத்தில் பிணமாக தொங்கிய கால்டாக்சி டிரைவர் அடித்து கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 18 March 2019 10:30 PM GMT (Updated: 18 March 2019 9:30 PM GMT)

மறைமலைநகரில் மரத்தில் கால்டாக்சி டிரைவர் பிணமாக தொங்கினார். அவர் அடித்து கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் மறைமலைநகர் பஸ் நிறுத்தம் பின்புறம் உள்ள மரத்தில் ஆண் உடல் ஒன்று தொங்குவதாக மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மரத்தில் தொங்கிய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இறந்து போன நபர் நெல்லை மாவட்டம், தென்காசி அடுத்த இலஞ்சி கிராமத்தைச் சேர்ந்த தங்கபாண்டியன் மகன் அருள் என்கிற மருதநாயகம் (வயது 40), என்பது தெரியவந்தது. இவர் சென்னையில் தங்கி கால்டாக்சி நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் எப்படி இறந்தார்? எவரேனும் கொலை செய்து மரத்தில் தூக்கில் தொங்க விட்டு சென்றார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story