கோவில் நகைகளை ஆண்டுதோறும் ஆய்வு செய்ய வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


கோவில் நகைகளை ஆண்டுதோறும் ஆய்வு செய்ய வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 18 March 2019 10:34 PM GMT (Updated: 18 March 2019 10:34 PM GMT)

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலில் உள்ள நகைகளை ஆண்டுதோறும் ஆய்வு செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

ராமேசுவரத்தை சேர்ந்த பக்சி சிவராஜன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் உள்ள பர்வதவர்த்தினி அம்மனுக்கு சொந்தமான வைர தாலி, வைர புல்லாக்கு, வைர மூக்குத்தி, வைர நெக்லஸ், வைர நெத்திச்சூடி, தங்க தாழம்பு, எமரால்டு திலகம், நீலகல் திலகம், வைர நெஞ்சு கவசம் உள்ளிட்ட 12 விதமான விலை மதிப்புமிக்க நகைகளை காணவில்லை. இந்த நகைகள் கோவிலில் இருப்பதாக 1972–ம் ஆண்டு கோவில் சொத்து பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் 1995–ம் ஆண்டின் சொத்து பட்டியலில் இந்த நகைகள் இடம் பெறவில்லை. எனவே கோவிலில் இருந்து விலை மதிக்க முடியாத 12 விதமான நகைகள் மாயமானது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–

இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள நகை மதிப்பீட்டாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். முக்கியமான கோவில்களில் நகை மதிப்பீட்டாளர் நகைகளை மதிப்பீடு செய்ய வேண்டும். நகை பதிவாளர் ஆண்டுதோறும் இதனை உறுதிப்படுத்த வேண்டும். நகைகளை உறுதிப்படுத்தி ஆவணங்களில் நகை பதிவாளர் மற்றும் கோவில் இணை கமி‌ஷனர் கையெழுத்து போட வேண்டும். கோவிலின் அசையும் மற்றும் அசையா சொத்துகளை மதிப்பீடு செய்து ஆவணங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஒவ்வொரு கோவிலிலும் நகை, வைரம் மற்றும் அசையும், அசையா சொத்துகளை பராமரிக்க வேண்டும்.

இவற்றை ஒவ்வொரு ஆண்டும் மறு ஆய்வு செய்ய வேண்டும். நகைகள் தொடர்பாக புகார் வந்தால் நகை மதிப்பீட்டாளர் மற்றும் நகை பதிவாளர் நகைகளின் ஆவணங்களை உறுதி செய்ய வேண்டும். ஒருவேளை நகைகள் தொலைந்துவிட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் நகைகளின் வகை, வடிவம் மற்றும் எடை ஆகியவை குறித்த ஆவணங்களை நகை பதிவாளர், இந்து சமய அறநிலையத்துறை கமி‌ஷனரிடம் வருகிற மே மாதம் 31–ந் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story