2 இடங்களில் பறக்கும் படையினர் வாகன சோதனை: ரூ.2 லட்சம்-250 நெல் மூடைகள் பறிமுதல்


2 இடங்களில் பறக்கும் படையினர் வாகன சோதனை: ரூ.2 லட்சம்-250 நெல் மூடைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 20 March 2019 10:00 PM GMT (Updated: 20 March 2019 9:54 PM GMT)

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.2 லட்சத்து 18 ஆயிரத்து 710 மற்றும் 250 நெல் மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தொண்டி,

வாலாந்தரவை அருகே வழுதூர் விலக்கு ரோட்டில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி கருப்பையா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் உள்ளிட்டோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த நெல்லை மாவட்ட வாகன பதிவு எண் கொண்ட வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் பயணித்த நெல்லை மாவட்டம் மேலகருங்குளத்தைச் சேர்ந்த தங்கபாண்டி என்பவரிடம் இருந்து ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.1 லட்சத்து 57 ஆயிரத்து 400ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தனியார் கல்லூரி கட்டுமான பணிக்கு பொருட்கள் வாங்க பணத்தை கொண்டு வந்ததாக கூறிய தங்கபாண்டியிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவாடானை அருகே எஸ்.பி.பட்டினத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராஜேந்திரன் தலைமையிலான அலுவலர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற பால் வேனை சோதனையிட்டனர். வேனில் இருந்த காரைக்குடியை சேர்ந்த முத்துமாணிக்கம் என்பவரிடமிருந்து முறையான ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.61,310 பணத்தை கைப்பற்றி மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

இதேபோல மார்த்தாண்டம் பகுதியில் இருந்து லாரி ஒன்றில் எவ்வித ஆவணமும் இல்லாமல் மன்னார்குடிக்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள 250 நெல் மூடைகளை பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றி லாரி டிரைவரான மார்த்தாண்டம் சதீஸ் என்பவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதன்பின்னர் கைப்பற்றப்பட்ட நெல் மூடைகளை கலெக்டரிடம் ஒப்படைத்தனர்.

Next Story