சட்டவிரோத மணல் குவாரியை அனுமதித்த அதிகாரிகள் ரூ.75 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும் மதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு


சட்டவிரோத மணல் குவாரியை அனுமதித்த அதிகாரிகள் ரூ.75 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும் மதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 23 March 2019 11:15 PM GMT (Updated: 23 March 2019 8:20 PM GMT)

மணல் கடத்தலுக்கு உதவிய எத்தனை அதிகாரிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்? என்று மதுரை ஐகோர்ட்டு அதிரடி கேள்வி எழுப்பியது. மேலும், சட்டவிரோத மணல் குவாரிக்கு அனுமதி வழங்கிய அதிகாரிகள் ரூ.75 லட்சம் டெபாசிட் செய்யவும் உத்தரவிட்டது.

மதுரை,

சென்னையை சேர்ந்த கண்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் “திண்டுக்கல் மாவட்டத்தில் சவடு மணல் குவாரிக்கு கலெக்டர் அனுமதி வழங்கி உள்ளார். ஆனால் சவடு மணலுக்கு பதிலாக நீர்நிலைகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுகிறது. எனவே சவடு மணல் குவாரிக்கு அனுமதி வழங்கி, திண்டுக்கல் கலெக்டர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, நீர்நிலைகளை பாதுகாக்க உத்தரவிட வேண்டும்” என அந்த மனுவில் கூறி இருந்தார்.

இதையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குவாரிகளை ஆய்வு செய்ய வக்கீல் கமிஷனராக லஜபதிராயை நியமித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி அவர் குவாரிகளை ஆய்வு செய்து கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தார்.

அதில், “மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சித்தரேவு கிராமத்தில் அரசு நிலம் மற்றும் தனியார் பட்டா நிலங்களில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டுள்ளது. அங்கு 10 ஆயிரம் கன மீட்டர் அளவுக்கு மண் எடுக்கப்பட்டுள்ளது” எனக்கூறப்பட்டு இருந்தது.இதையடுத்து அந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, “இயற்கை வளங்கள் கொள்ளை போவதால் நாம் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கும் நிலைமை ஏற்படும். மணல் கொள்ளையை தடுக்க மனுதாரர் அதிகாரிகளிடம் பல தடவை புகார் மனு அளித்துள்ளார். ஆனால் அதன்பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இயற்கை வளங்களை கொள்ளையடிப்பவர்களுக்கு அரசு எந்திரம் துணைபோய் உள்ளது.

மணல் கொள்ளையர்கள் மீது மட்டுமின்றி, அவர்களுக்கு துணையாக இருந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

ஏற்கனவே மணல் கடத்தலுக்கு உதவியாக இருக்கும் அரசு அதிகாரிகள், ஊழியர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பும்படி தமிழக உள்துறை செயலாளருக்கு கடந்த 8.5.2018 அன்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்படி எத்தனை அதிகாரிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பது தெரியவில்லை.

இது தொடர்பான தகவல்களை அதிகாரிகள் அடுத்த விசாரணையின்போது கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும்.

பழனி சித்தரேவு கிராமத்தில் உரிமம் பெறாத இடத்தில் சட்டவிரோதமாக மணல் குவாரி நடத்த அனுமதி வழங்கிய அதிகாரிகள் ரூ.75 லட்சத்தை டெபாசிட் செய்ய வேண்டும்.

மேலும் தமிழகத்தில் மாவட்ட வாரியாக மணல், சவடு மண், புளூமெட்டல் மற்றும் குவாரிகளுக்கு தடை விதிக்கப்பட்ட இடங்கள் எத்தனை? தடை செய்யப்பட்ட இடங்களில் சட்டவிரோதமாக குவாரி நடந்து வரும் பகுதிகள் எத்தனை?

மணல் கொள்ளைக்கு உதவிய எத்தனை அதிகாரிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்து, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்? அவர்கள் என்னென்ன பொறுப்புகளில் உள்ளனர்?

மணல் கொள்ளை தொடர்பாக என்னென்ன பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்படுகிறது? மணல் கொள்ளையர்களிடம் இருந்து கடந்த 10 ஆண்டுகளில் வசூலான அபராத தொகை எவ்வளவு? என்பதை அறிக்கையாக தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட தமிழக அரசின் அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பின்னர் இந்த வழக்கை ஒத்திவைத்தனர்.

Next Story