அ.தி.மு.க.–தே.மு.தி.க. கூட்டணி வருங்காலத்திலும் தொடரும் பிரேமலதா விஜயகாந்த் உறுதி


அ.தி.மு.க.–தே.மு.தி.க. கூட்டணி வருங்காலத்திலும் தொடரும் பிரேமலதா விஜயகாந்த் உறுதி
x
தினத்தந்தி 24 March 2019 11:00 PM GMT (Updated: 24 March 2019 8:24 PM GMT)

வருங்காலத்தில் நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் அ.தி.மு.க.–தே.மு.தி.க. கூட்டணி தொடரும் என பிரேமலதா விஜயகாந்த் உறுதியளித்தார்.

விருதுநகர்,

விருதுநகரில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள், விருதுநகர் நாடாளுமன்ற வேட்பாளர் அழகர்சாமி, சாத்தூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ராஜவர்மன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் பிரேமலதா பேசியதாவது:–

இந்த கூட்டணி அமைந்துவிடக்கூடாது என எதிர்க்கட்சியினர் சிண்டுமுடியும் வேலையில் ஈடுபட்டனர். ஆனால் நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பதை போல எதிர்க்கட்சியினரின் கலகத்தையும் மீறி அ.தி.மு.க.–தே.மு.தி.க. கூட்டணி அமைந்தது.

விஜயகாந்தின் ரோல்மாடல் எம்.ஜி.ஆர். தான். நாங்கள் வீட்டில் படுக்கையறையில் மாட்டியிருப்பது எம்.ஜிஆர்., ஜானகி அம்மாள் உள்ள படம்தான். எங்கள் திருமணம் மதுரையில் நடந்ததை தொடர்ந்து சென்னையில் எங்கள் வீட்டிற்கு வந்த ஜானகிஅம்மாள் எம்.ஜி.ஆர். பெயர் பொறித்த மோதிரத்தை பரிசாக தந்தார். அதை நாங்கள் பொக்கி‌ஷமாக பாதுகாத்து வருகிறோம். அதே போன்று ஜானகிஅம்மாள் விஜயகாந்திடம் யார் யாரோ வந்து எம்.ஜி.ஆரிடம் வேண்டியதை பெற்றுச் செல்கிறார்கள், நீ வந்தால் என்ன என்று கேட்டுவிட்டு எம்.ஜி.ஆர். பயன்படுத்திய வேனையும், உலகம் சுற்றும் வாலிபனில் பயன்படுத்திய பேன்ட் மற்றும் கோட்டையும் கொடுத்தார். அதையும் நாங்கள் பொக்கி‌ஷமாக பாதுகாத்து வருகிறோம். எங்கள் மகன்கள் விஜயபிரபாகரன், சண்முகபாண்டியன் ஆகியோர் பிறந்த போது ஜானகிஅம்மாள் வீட்டிற்கு வந்து அவர்களை கொஞ்சி மகிழ்ந்தார்.

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சை கேட்டால் மன அழுத்தம் மறந்து போய்விடும். அவர் பேசும்போது 2011–ல் அமைந்த அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி சாதனை கூட்டணி என்று குறிப்பிட்டார். அப்போது எதிர்க்கட்சி என்பதே இல்லாமல் போய்விட்டது. கூட்டணியில் போட்டியிட்ட நாங்கள் தான் எதிர்க்கட்சியாக இருந்தோம். பின்னர் ஏன் பிரிந்தீர்கள் என கேட்கலாம். நம்கட்சியில் இருந்த 3 துரோகிகளைதூண்டிவிட்டு விஜயகாந்திற்கும் ஜெயலலிதாவிற்கும் கோபம் வரச்செய்தார்கள் அதன் காரணமாக பிரியும் நிலை ஏற்பட்டது.

ஜெயலலிதாவிற்கும், விஜயகாந்திற்கும் படங்களில்தான் நடிக்கதெரியுமே தவிர அரசியலில் நடிக்கத் தெரியாது. ஜெயலலிதா திறமையான பெண்மணி. அவருக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளித்திருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாம் என நானும் விஜயகாந்தும் பேசிக்கொண்டிருந்தோம். அதைத்தான் முதல்– அமைச்சரும், துணை முதல்–அமைச்சரும் எங்களை சந்திக்க வரும் போது குறிப்பிட்டோம். ஜெயலலிதா காவிரி பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருந்த போது அவ்வளவு கூட்டம் இருந்த போதும் நான் நேரில் சென்று பார்த்தேன். விஜயகாந்த் என்ன சொன்னாலும் அதனை நிறைவேற்றும் சக்தி படைத்தவர்கள் தே.மு.தி.க. தொண்டர்கள்.

தற்போது அமைந்துள்ள கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களிலும் வெற்றிபெறும். நாளை நமதே 40–ம் நமதே. தே.மு.தி.க., அ.தி.மு.க. கூட்டணி அடுத்துவரும் உள்ளாட்சி தேர்தலிலும் சட்டமன்ற தேர்தலிலும் இனி வருங்காலத்தில் நடைபெறும் அனைத்து தேர்தலிலும் உறுதியாக தொடரும் என்பதை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். சாமானியனை கூட அரசியலில் உயர்த்துபவர்கள் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் விஜயகாந்தும்தான். பிரசாரத்தின் போது தொண்டர்களோடு தொண்டராக அமர்ந்து விஜயகாந்த் சாப்பிடக்கூடியவர்.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது கொடநாடு குற்றச்சம்பவம் பற்றி குற்றம் சாட்டுகிறார். சென்னை அண்ணாநகரில் சாதிக் பாட்சா இறந்ததற்கு காரணம் யார்? நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன் இதற்கு பதில் சொல்லிவிட்டு முதல்–அமைச்சர் மீது குற்றம் சாட்டட்டும். கச்சத்தீவு பிரச்சினையாகட்டும், காவிரி பிரச்சினையாகட்டும், முல்லைபெரியாறு பிரச்சினையாகட்டும் தமிழகத்தில் எந்த பிரச்சினையையாவது தி.மு.க. தீர்த்து வைத்துள்ளதா?. கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்க்க காரணமாக இருந்தது தி.மு.க. தான். தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் இருந்தபோதுதான் இலங்கையில் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். மோடி அரசும் அ.தி.மு.க. அரசும் எந்த திட்டங்களையும் நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்ட தி.மு.க.விற்கு தகுதி கிடையாது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story