கோடைகால சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது: தனியார் பள்ளிகளில் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி அளிக்கலாம் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


கோடைகால சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது: தனியார் பள்ளிகளில் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி அளிக்கலாம் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 16 April 2019 11:00 PM GMT (Updated: 16 April 2019 11:00 PM GMT)

தனியார் பள்ளிகளில் கோடைகால சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும், ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி அளிக்கலாம் என்றும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை,

தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த விஜயராமன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கோடை விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக் கூடாது என தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் சார்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. இதை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் 2018-2019-ம் கல்வி ஆண்டில் தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பாடத்திட்டத்தில் மாணவர்களுக்கு நீட், ஐ.ஐ.டி. என பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு கோடை காலத்தில் தான் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். இதற்காக தனி வகுப்புகள் நடத்தப்படும். எனவே கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடாது என்ற சுற்றறிக்கையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணை முடிவில், “மெட்ரிகுலேசன் பள்ளிகளில் நீட் தேர்வுக்கும், ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான நுழைவு தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்த தடை இல்லை. ஆனால் கோடைகால சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது” என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

Next Story