குளுகுளு சீசன், வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு அறைகள் கிடைக்காமல் ஏமாற்றம்


குளுகுளு சீசன், வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு அறைகள் கிடைக்காமல் ஏமாற்றம்
x
தினத்தந்தி 5 May 2019 4:15 AM IST (Updated: 5 May 2019 3:47 AM IST)
t-max-icont-min-icon

குளுகுளு சீசன், வாரவிடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். தங்குவதற்கு அறைகள் கிடைக்காததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

கொடைக்கானல்,

கொடைக்கானல் பகுதியில் தற்போது குளுகுளு சீசன் தொடங்கியுள்ளது. இதனை அனுபவிப்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை புரிகின்றனர். இதனிடையே கடந்த மாதம் பெய்த தொடர் மழை காரணமாக நட்சத்திர ஏரி நிரம்பும் தருவாயில் உள்ளது. மேலும் நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளிலும் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு நீங்கியது.

இந்தநிலையில் நேற்று அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில் காலையில் மேகமூட்டம் நிலவிய நிலையில் 9 மணி முதல் நண்பகல் வரை வெயில் அடித்தது. பின்னர் மாலை 5 மணிக்கு மேல் இதமான சூழ்நிலை நிலவியது. இதனிடையே நேற்று காலை முதலே ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனிடையே கொடைக்கானலுக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் ஏரியில் படகு சவாரி செய்து பொழுதை களித்தனர். மேலும் ஏரியை சுற்றி சைக்கிள் சவாரி, குதிரை சவாரியிலும் உற்சாகத்தில் ஈடுபட்டனர். அத்துடன் பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் லட்சக்கணக்கான மலர்களை கண்டு களித்தனர்.

இந்தநிலையில் சுற்றுலா பயணிகள் அதிக வருகை காரணமாக நகரில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. மேலும் ஏராளமான தங்கும் விடுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளதால் அறைகள் கிடைக்காமல் பல சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தொடர் சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக சுற்றுலா தொழிலை நம்பியுள்ள அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

1 More update

Next Story