சேலத்தில் முன்விரோதம் காரணமாக தலையில் கல்லை போட்டு தொழிலாளி படுகொலை - வாலிபர் கைது


சேலத்தில் முன்விரோதம் காரணமாக தலையில் கல்லை போட்டு தொழிலாளி படுகொலை - வாலிபர் கைது
x
தினத்தந்தி 14 May 2019 11:55 PM GMT (Updated: 14 May 2019 11:55 PM GMT)

சேலத்தில் முன்விரோதம் காரணமாக தலையில் கல்லை போட்டு தொழிலாளியை கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சூரமங்கலம்,

முன்விரோதம் காரணமாக தலையில் கல்லை போட்டு தொழிலாளியை கொன்ற இந்த படுகொலை குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேலம் பழைய சூரமங்கலம் பெரியார் தெரு ஓடை பகுதியை சேர்ந்தவர் நல்லதம்பி (வயது 55). இவர் அந்த பகுதியில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் காளிதாஸ் (30). தொழிலாளி.

நல்லதம்பிக்கும், மாரியப்பனுக்கும் இடையே வேலை பார்க்கும் இடத்தில் பழக்கம் ஏற்பட்டது. மேலும் 2 பேருக்கும் மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் 2 பேரும் சேர்ந்து அடிக்கடி மது குடித்து வந்தனர். அப்போது குடிபோதையில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, அது முன் விரோதமாக மாறியது. இதன் காரணமாக அடிக்கடி அவர் களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நல்லதம்பி நேற்று மதியம் தனது வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காளிதாஸ் குடிபோதையில் வந்துள்ளார். வீட்டின் கதவை திறந்து இருந்ததால், நல்லதம்பி தூங்கிக்கொண்டிருந்ததை அவர் பார்த்தார். முன்விரோதத்தால் ஆத்திரத்தில் இருந்த காளிதாஸ், திடீரென்று தெருவில் கிடந்த பெரிய கல்லை எடுத்து வீட்டுக்குள் படுத்திருந்த நல்ல தம்பியின் தலையில் ஓங்கி போட்டார்.

இதில் தலை நசுங்கி ரத்தம் பீறிட்டு வெளியேறியதில், நல்லதம்பி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். இதை பார்த்ததும் காளிதாஸ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து நல்லதம்பியின் மனைவி ராஜம், சூரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து போன நல்லதம்பியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் சுற்றித்திரிந்த காளிதாசை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளி முன்விரோதம் காரணமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story