சத்தியமங்கலம் அருகே திருடனை அடித்துக்கொன்ற தொழிலாளி கைது


சத்தியமங்கலம் அருகே திருடனை அடித்துக்கொன்ற தொழிலாளி கைது
x
தினத்தந்தி 4 Jun 2019 11:10 PM GMT (Updated: 4 Jun 2019 11:10 PM GMT)

சத்தியமங்கலம் அருகே திருடனை அடித்துக்கொன்றதாக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். பணத்தை பறித்ததால் கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்து உள்ளார்.

சத்தியமங்கலம்,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகே கடந்த மாதம் 25–ந்தேதி, 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் தலை மற்றும் முகத்தில் அடிபட்டு மயங்கி கிடந்தார். இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மயங்கி கிடந்தவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இதுபற்றி சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர், பவானிசாகர் அருகே உள்ள புதுபீர்கடவு பகுதியை சேர்ந்த சின்னத்துரை (45) என்பது தெரியவந்தது.

இந்தநியைல் சின்னத்துரையின் உடலை பிரேத பரிசோதனை செய்தபோது, அவரின் முகத்தில் பலமாக தாக்கியதால்தான் இறந்திருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சத்தியமங்கலம் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து, சின்னத்துரையை அடித்துக் கொலை செய்தவரை வலைவீசி தேடி வந்தனர். நேற்றுக்காலை சத்தியமங்கலம் போலீசார் சத்தியமங்கலம் வாய்க்கால் மேடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்தப்பகுதியில் சந்தேகப்படும்படி ஒருவர் நின்று கொண்டு இருந்தார். இதனால் போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால் அவரை சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர், திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள சாவக்காட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த தொழிலாளியான கோபால் (வயது 45) என்பதும், இவர் தான் கடந்த மாதம் 25–ந்தேதி பஸ் நிலையம் அருகே சின்னத்துரையை அடித்துக்கொலை செய்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார், கோபாலை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட கோபால் போலீசில் அளித்து உள்ள வாக்குமூலம் வருமாறு:–

நான் கடந்த மாதம் 24–ந்தேதி தாளவாடியில் உள்ள என்னுடைய உறவினர் வீட்டுக்கு சென்றேன். பின்னர் அவரிடம் இருந்து ரூ.50 ஆயிரம் கடனாக வாங்கிவிட்டு மீண்டும் சாவக்காட்டுப்பாளைம் செல்ல முடிவு செய்தேன். அதன்படி தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் பஸ் நிலையத்துக்கு வந்தேன். இரவு நேரமாகிவிட்டதால் பஸ் இல்லை. இதனால் சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் தங்கிவிட முடிவு செய்து, அங்கு நின்று கொண்டு இருந்தேன்.

அப்போது மர்மநபர்கள் 3 பேர் என்னிடம் இருந்த பணம் மற்றும் செல்போனை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பிஓடினார்கள். நானும் அவர்களை துரத்தினேன். இதில் ஒருவன் மட்டும் என்னிடம் சிக்கினான். அப்போது அவனிடம் இருந்து என்னுடைய பணம் மற்றும் செல்போனை பிடுங்கினேன். இதில் அந்த நபர் தடுத்ததால் அவனின் முகத்தில் சரமாரியாக தாக்கினேன். இதில் அவன் மயங்கி கீழே விழுந்துவிட்டான். இதைத்தொடர்ந்து நான் அங்கிருந்து என்னுடைய சொந்த ஊருக்கு சென்றுவிட்டேன். இந்தநிலையில் நான் தாக்கியதில் அந்த திருடன் இறந்துவிட்டது எனக்கு தெரியவந்தது. இன்று (நேற்று) மீண்டும் சத்தியமங்கலம் வாய்க்கால் மேடு பகுதிக்கு வந்தபோது போலீசில் சிக்கிக்கொண்டேன்.

இவ்வாறு வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கொலையாளி கோபாலை சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவரை கோபி சிறையில் அடைத்தனர்.


Next Story