மடிக்கணினி வழங்க வேண்டும் கலெக்டரிடம் மாணவர்கள் கோரிக்கை


மடிக்கணினி வழங்க வேண்டும் கலெக்டரிடம் மாணவர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 8 July 2019 11:00 PM GMT (Updated: 8 July 2019 6:57 PM GMT)

மடிக்கணினி வழங்க வேண்டும் என கலெக்டரிடம் மாணவர்கள் கோரிக்கை வைத்தனர்.

தஞ்சாவூர்,

திருவோணம் வட்டார விவசாயிகள் நலச்சங்க ஒன்றிய செயலாளர் சின்னத்துரை தலைமையில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில், திருவோணம் ஒன்றியத்திற்குட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2017-18 மற்றும் 2018-19- கல்வி ஆண்டில் பயின்ற 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அரசு அறிவித்த கல்வி உதவித்தொகை மற்றும் மடிக்கணினி இதுவரை வழங்கப்படவில்லை. மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு கல்வி உதவித்தொகை, மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

பாபநாசம் தாலுகா உக்கடை கிராமத்தை சேர்ந்த சிலர் அளித்த மனுவில், உக்கடையை சேர்ந்த மணிகண்டனுக்கு கடந்த மாதம் 14-ந் தேதி திருமணம் நடைபெற்றது. அதன்பிறகு 28-ந் தேதி தனது மனைவியுடன் அவர் வீட்டில் இருந்தபோது அம்மாப்பேட்டை போலீசார் வந்து விசாரணைக்காக அழைத்து செல்வதாக கூறி மணிகண்டனை அழைத்து சென்றனர்.

அவரை 2 நாட்கள் சட்டவிரோதமாக போலீஸ் நிலையத்தில் வைத்து துன்புறுத்தி பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் ராம.ரவிக்குமார், மாநிலக்குழு உறுப்பினர் சன்சிவா, மாவட்ட அமைப்பாளர் பாலகுமார், மாவட்ட துணை அமைப்பாளர் வசந்த், ஓய்வு பெற்ற கோவில் நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ் ஆகியோர் அளித்த மனுவில், கும்பகோணம் உடையாளூரில் உள்ள மாமன்னன் ராஜராஜசோழன் நினைவிடத்தில் பெரியகோவில் கட்ட வேண்டும். குஜராத்தில் சர்தார்வல்லபாய் பட்டேலுக்கு அமைக்கப்பட்ட சிலையை போல் சென்னையில் ராஜராஜசோழனுக்கு சிலை வைக்க வேண்டும். சதயவிழாவின் போது ராஜராஜசோழன் சிலைக்கு சாதி ரீதியாக அஞ்சலி செலுத்த தடை விதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

தஞ்சை தொல்காப்பியர் நகரை சேர்ந்த மக்கள் சிலர் அளித்த மனுவில், தொல்காப்பியர் நகர் பகுதியில் மதுக்கூடம் அமைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தஞ்சையை அடுத்த மேலவெளி காமாட்சியம்மன் நகரை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என கூறப்பட்டிருந்தது. அதேபோல் வல்லம்-ஒரத்தநாடு சாலையில் பள்ளியின் அருகே அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் அளிக்கப்பட்டன.

Next Story