பலத்த சூறாவளி காற்று: ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை


பலத்த சூறாவளி காற்று: ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை
x
தினத்தந்தி 20 July 2019 11:00 PM GMT (Updated: 20 July 2019 7:43 PM GMT)

பலத்த சூறாவளி காற்று காரணமாக ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது.

ராமேசுவரம்,

ராமேசுவரம் பகுதியில் கடந்த சில நாட்களாக வழக்கத்துக்கு மாறாக பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும், கடலோர பகுதிகளில் வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனால் ராமேசுவரம் தீவு பகுதியை சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல மீன்துறை அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டது.

இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட ஊர்களில் 1,500–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 800–க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் நேற்று மீன்பிடிக்க செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டன.

தனுஷ்கோடி பகுதியிலும் வழக்கத்தை விட பலத்த காற்று வீசி வருவதுடன் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. என்.ஆர்.சத்திரம் கடற்கரையில் உள்ள மீன்பிடி துறைமுகத்தை தாண்டி கடல் அலை பல அடி உயரத்திற்கு சீறி எழுந்து சிதறியது.


Next Story