பணம், நகை கேட்டு தொந்தரவு செய்த கள்ளக்காதலி கொன்று புதைப்பு அரசு ஊழியர் கைது


பணம், நகை கேட்டு தொந்தரவு செய்த கள்ளக்காதலி கொன்று புதைப்பு அரசு ஊழியர் கைது
x
தினத்தந்தி 24 Aug 2019 11:15 PM GMT (Updated: 24 Aug 2019 6:38 PM GMT)

பொன்னமராவதி அருகே பணம், நகை கேட்டு தொந்தரவு செய்த கள்ளக்காதலியை கொன்று புதைத்த அரசு ஊழியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொன்னமராவதி,

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம் கொன்னைப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள். இவர் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பாண்டிச்செல்வி (வயது 34). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பெருமாள் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால், பாண்டிச்செல்வி தனது குழந்தைகளுடன் கொன்னைப்பட்டியில் வசித்து வந்தார்.

இந்நிலையில் பாண்டிச்செல்விக்கும் வாழைக்குறிச்சியை சேர்ந்த ரெங்கையா (37) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. ரெங்கையா பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பாண்டிச்செல்வி அடிக்கடி ரெங்கையாவிடம் பணம், நகை கேட்டு தொந்தரவு செய்து வந்து உள்ளார். இதற்கு ரெங்கையா மறுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பத்தன்று பாண்டிச்செல்வி, ரெங்கையா ஆகியோர் வாழைக்குறிச்சி ஊராட்சி பகுதியில் உள்ள ஒரு கண்மாய் பகுதியில் தனியாக சந்தித்து உள்ளனர்.

அப்போது பாண்டிச்செல்வி நகை, பணம் கேட்டு அவரை தொந்தரவு செய்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரெங்கையா மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாண்டிச்செல்வியை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த பாண்டிச்செல்வி பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து ரெங்கையா, பாண்டிச்செல்வியின் உடலை அந்த பகுதியில் குழி தோண்டி புதைத்துள்ளார். பின்னர் நேற்று மலேசியாவில் உள்ள பெருமாளுக்கு உனது மனைவியை கொலை செய்து, புதைத்து விட்டேன் என வாட்ஸ்-அப்பில் தகவல் அனுப்பி உள்ளார்.

இதற்கிடையில் பாண்டிச்செல்வியை காணவில்லை என்று அவரது தந்தை சோனைமுத்து நேற்று முன்தினம் பொன்னமராவதி போலீசில் புகார் அளித்து இருந்தார். இந்நிலையில் பெருமாள், சோனைமுத்துவை தொடர்பு கொண்டு பாண்டிச்செல்வி கொலை குறித்து செல்போனில் தகவல் தெரிவித்தார். பின்னர் சோனைமுத்து பொன்னமராவதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலின் பேரில், போலீசார் ரெங்கையாவை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பாண்டிச்செல்வியை கொலை செய்ததை ரெங்கையா ஒப்புக்கொண்டார். பின்னர் அவர் பாண்டிச்செல்வி உடலை புதைத்த இடத்தை போலீசாருக்கு காண்பித்தார். இதையடுத்து பொன்னமராவதி தாசில்தார் பாலகிருஷ்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்மாறன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார், வருவாய்த்துறை அலுவலர்கள் முன்னிலையில் நேற்று காலையில் வாழைக்குறிச்சி கண்மாய் பகுதிக்கு சென்று பாண்டிச்செல்வி உடல் புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி, பாண்டிச்செல்வியின் உடலை கைப்பற்றினர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பொன்னமராவதி போலீசார் பெண் மாயமான வழக்கை கொலை வழக்காக மாற்றி, ரெங்கையாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாண்டிச்செல்வியை கொலை செய்த ரெங்கையா மாற்றுத்திறனாளி என தெரியவந்தது. இந்நிலையில் பாண்டிச்செல்வி உடலை புதைப்பதற்கு பள்ளம் தோண்டி கொடுத்த வாழைக்குறிச்சியை சேர்ந்த தங்கராஜ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணம், நகை கேட்டு தொந்தரவு கொடுத்த கள்ளக்காதலியை மாற்றுத்திறனாளி கொலை செய்து புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story