பிடிபட்ட கொள்ளையன் முருகனிடமிருந்து நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 12 கிலோ தங்கம்- வைர நகைகள் பறிமுதல்


பிடிபட்ட கொள்ளையன் முருகனிடமிருந்து நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 12 கிலோ தங்கம்- வைர நகைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 12 Oct 2019 11:15 PM GMT (Updated: 12 Oct 2019 6:52 PM GMT)

பிடிபட்ட கொள்ளையன் முருகனிடமிருந்து திருச்சி நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 12 கிலோ தங்க- வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

பெரம்பலூர்,

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கடந்த 2-ந் தேதி அதிகாலை, கடையின் பின்பக்க சுவரில் துளைபோட்டு ரூ.12 கோடியே 41 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து விசாரணை நடத்த போலீஸ் கமி‌‌ஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இதற்கிடையே திருவாரூர் விளமல் பகுதியில் நடந்த வாகன சோதனையில் திருவாரூர் மடப்புரத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 34) என்பவரை போலீசார் பிடித்தனர். அப்போது அவரிடம் லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட 5 கிலோ தங்க நகைகள் இருந்தன. விசாரணையில், திருவாரூர் சீராத்தோப்பை சேர்ந்த முருகன் (45), அவரது அக்காள் மகன் சுரே‌‌ஷ் (28) உள்பட 8 பேர் கொண்ட கும்பல் லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து வாகன சோதனையில் சிக்கிய மணிகண்டன், தலைமறைவான சுரே‌ஷின் தாய் கனகவள்ளி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கொள்ளை கும்பல் தலைவனான முருகன் மற்றும் கூட்டாளி சுரேஷை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள். இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் கோர்ட்டில் கடந்த 10-ந் தேதி சுரே‌‌ஷ் சரண் அடைந்தார். அவரை 5 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி சுரே‌‌ஷ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க செங்கம் கோர்ட்டில் திருச்சி போலீசார் மனுதாக்கல் செய்துள்ளனர். இதற்கிடையே திருச்சி திருவெறும்பூரில் வேங்கூர் அருகே நறுங்குழல்நாயகி நகர் என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து முருகன் தங்கி இருந்ததாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு சென்று முருகன் தங்கி இருந்த வீட்டில் சோதனை நடத்தினார்கள். ஆனால் அங்கு கொள்ளையடிக்கப்பட்ட நகைகளும் இல்லை. முருகனும் இல்லை.

இந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த முருகன் நேற்று முன்தினம் கர்நாடக மாநிலம் பெங்களூரு எம்.ஜி.ரோடு அருகே மேயோ ஹாலில் உள்ள பெங்களூரு மெட்ரோ பாலிட்டன் 11-வது கூடுதல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில், கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு திருட்டு வழக்கில் சரண் அடைந்தார். இதையடுத்து முருகனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து முருகனை போலீசார் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனை லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை வழக்கு தொடர்பாக திருச்சி போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை எடுத்து வந்தனர்.

ஆனால் திருச்சி போலீசாருக்கு முன்பாகவே பெங்களூரு பொம்மனஹள்ளி போலீசார் திருட்டு வழக்கு சம்பந்தமாக முருகனிடம் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் எனக்கூறி பெங்களூரு மெட்ரோபாலிட்டன் 11-வது கூடுதல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் உடனடியாக மனு செய்தனர். இந்த மனு மீது நேற்று முன்தினம் விசாரணை நடத்திய கோர்ட்டு முருகனை 4 நாள் காவலில் வைத்து விசாரிக்க பொம்மனஹள்ளி போலீசாருக்கு அனுமதி அளித்தது. இதையடுத்து முருகனை சிறையில் இருந்து காவலில் எடுத்த பொம்மனஹள்ளி போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரிக்க தொடங்கினர்.

அப்போது பொம்மனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்த திருட்டு வழக்கு தொடர்பான நகைகளை தஞ்சை மாவட்டம் கல்லணை அருகே உள்ள காட்டுப்பகுதியில் புதைத்து வைத்திருப்பதாக முருகன் திடுக்கிடும் தகவலை போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து 10-க்கும் மேற்பட்ட கர்நாடக போலீசார் முருகனை அழைத்து கொண்டு 2 கார்களில் நேற்று முன்தினம் இரவு கல்லணை அருகே விரைந்தனர். இந்நிலையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை புதைத்து வைத்திருப்பதாக முருகன் கூறிய கல்லணை அருகே காட்டு பகுதியில் உள்ள இடத்தில் போலீசார் தோண்டினர். அப்போது அங்கு கிலோ கணக்கில் தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து அந்த நகைகளை கைப்பற்றிய கர்நாடக போலீசார், ஏற்கனவே முருகன் திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் வேங்கூர் அருகே நறுங்குழல் நாயகி நகரில் வாடகைக்கு தங்கியிருந்த வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை புதைத்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், அங்கு சென்று சல்லடை போட்டு தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அங்கு நகைகள் ஏதும் சிக்கவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து கைப்பற்றப்பட்ட நகைகளுடன், முருகனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து விடலாம் என எண்ணிய போலீசார் அவரை கார் மூலம் கர்நாடகத்திற்கு அழைத்து செல்லலாம் என்று முடிவு எடுத்து புறப்பட்டனர்.

இந்த நிலையில் திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கொள்ளையடித்த கும்பலின் முக்கிய குற்றவாளி முருகனை கர்நாடக போலீசார் திருச்சிக்கு அழைத்து வந்து பெரம்பலூர் வழியாக சென்று கொண்டிருப்பதாக, திருச்சி மாநகர, மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. முருகன் கூறிய இடத்தில் மீட்கப்பட்ட நகைகள் திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கொள்ளையடித்த நகைகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், திருச்சி போலீசார், இதுகுறித்து உடனடியாக பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நி‌ஷா பார்த்திபனுக்கு தகவல் தெரிவித்து, முருகனை அழைத்து செல்லும் வாகனத்தை பிடிக்குமாறு உத்தரவிட்டனர்.

இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு நி‌ஷா பார்த்திபன், பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபடுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் வேப்பந்தட்டை தாலுகா கிரு‌‌ஷ்ணாபுரம் சோதனை சாவடியில் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் அந்த வழியாக சந்தேகப்படும்படியாக வந்து கொண்டிருந்த 2 கார்களை வழிமறித்தனர். அதில் கர்நாடக போலீசார் இருந்தனர். அவர்கள், எங்கள் பகுதியில் நடந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய நகைகளை கொள்ளையன் முருகனுடன் வந்து எடுத்து செல்வதாக கூறி தமிழக போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் கர்நாடக போலீசார் மின்னல் வேகத்தில் சென்றனர். இதையடுத்து அந்த கார்களை கிரு‌‌ஷ்ணாபுரம் அருகே உள்ள வெங்கனூர் பகுதியில் அரும்பாவூர் போலீசார் மடக்கி பிடித்து பெரம்பலூர் அருகே தண்ணீர்பந்தலில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்திற்கு அழைத்து வந்தனர். இதற்கிடையே திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாஉல்ஹக் மற்றும் திருச்சி மாநகர துணை கமி‌‌ஷனர் மயில்வாகனன், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நி‌ஷா பார்த்திபன் ஆகியோர் தலைமையிலான போலீசாரும் அங்கு விரைந்து வந்தனர்.

இதையடுத்து ஆயுதப்படை மைதானத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து முருகனிடம் தமிழக போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில், கல்லணை அருகே காட்டு பகுதியில் இருந்து மீட்கப்பட்ட நகைகள் அனைத்தும் திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் தான் என தெரியவந்தது. மீட்கப்பட்ட 11½ கிலோ தங்க நகைகளையும், ½ கிலோ வைர நகைகளையும் திருச்சி மாநகர போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் கர்நாடக போலீசார் முருகனிடம் மீட்கப்பட்ட நகைகள் திருச்சி லலிதா ஜூவல்லரி நகைகளாக இருந்தாலும், அதனை நாங்கள் கர்நாடக மாநில கோர்ட்டில் சமர்ப்பித்து, முருகனை ஆஜர்படுத்துவோம். அதன்பிறகு தமிழக போலீசார் முருகனை காவலில் எடுத்து விசாரிக்குமாறு தெரிவித்தனர். இதனால் நேற்று காலை 11.30 மணியளவில் தொடங்கிய விசாரணை மாலை வரை நீடித்தது.

Next Story