திருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்பு: பெண் உள்பட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


திருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்பு: பெண் உள்பட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 7 Nov 2019 11:00 PM GMT (Updated: 7 Nov 2019 8:01 PM GMT)

திருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய பெண் உள்பட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருச்சி,

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரியில் கடந்த மாதம் 2-ந் தேதி ரூ.12 கோடியே 31 லட்சம் மதிப்புள்ள 28½ கிலோ தங்க நகைகள் கொள்ளை போனது. இந்த கொள்ளை சம்பவத்தில் திருவாரூர் மாவட்டம் சீராத்தோப்பை சேர்ந்த பிரபல கொள்ளையன் முருகன், அவரது அக்காள் மகன் சுரேஷ், மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த கணேசன் உள்பட 5 பேர் ஈடுபட்டது தெரியவந்தது.

இது குறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய திருவாரூர் மடப்புரத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 34), திருவாரூர் சீராத்தோப்பை சேர்ந்த முருகனின் அக்காள் கனகவள்ளி(57) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

குண்டர் சட்டம் பாய்ந்தது

இவர்களிடம் இருந்து 4¾ கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், விசாரணையில் இவர்கள் இருவரும் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணத்தில் இருந்ததால் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த இருவரிடமும் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

Next Story