சேலத்தில், பூட்டை உடைத்து மாநகராட்சி என்ஜினீயர் வீட்டில் 40 பவுன் நகை, ரூ.3 லட்சம் கொள்ளை


சேலத்தில், பூட்டை உடைத்து மாநகராட்சி என்ஜினீயர் வீட்டில் 40 பவுன் நகை, ரூ.3 லட்சம் கொள்ளை
x
தினத்தந்தி 11 Jan 2020 11:15 PM GMT (Updated: 11 Jan 2020 5:36 PM GMT)

சேலத்தில் பூட்டை உடைத்து மாநகராட்சி என்ஜினீயர் வீட்டில் 40 பவுன் நகை, ரூ.3 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது. இதில் தொடர்புடைய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சேலம்,

சேலம் பொன்னம்மாபேட்டை கேட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அசோகன் (வயது 57). இவர் சேலம் மாநகராட்சியில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி பருவதவர்த்தினி. இவர்களுக்கு ஜீவிகா என்ற மகளும், பிரஜீத் என்ற மகனும் உள்ளனர். இதில் ஜீவிகா சென்னையில் தங்கி இருந்து எம்.பி.பி.எஸ். மூன்றாமாண்டு படித்து வருகிறார். பிரஜீத் சேலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான்.

கடந்த 9-ந் தேதி அசோகன் அலுவலக வேலை தொடர்பாக சென்னை சென்றார். நேற்று முன்தினம் பிரஜீத்தை திருவண்ணாமலையில் நடக்கும் நீச்சல் போட்டியில் பங்கேற்பதற்காக பருவதவர்த்தினி அழைத்துக்கொண்டு சென்றார். இந்தநிலையில் நேற்று அதிகாலை 5 மணிக்கு சென்னை சென்றிருந்த அசோகன் வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் வீட்டின் மெயின்கேட்டை திறந்து உள்ளே சென்றார். அப்போது அங்கு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்ததைப்பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார்.

40 பவுன் நகை, ரூ.3 லட்சம் கொள்ளை

இதுகுறித்து அசோகன் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் உதவி போலீஸ் கமி‌‌ஷனர் பூபதிராஜன், இன்ஸ்பெக்டர் கிரு‌‌ஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் 40 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது. இதனிடையே திருவண்ணாமலைக்கு சென்றுள்ள பருவதவர்த்தினி வந்தால் தான் வீட்டில் எத்தனை பவுன் நகை கொள்ளை போனது என்பது முழுமையாக தெரியவரும் என அசோகன் தெரிவித்தார்.

இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகை பதிவு எடுக்கப்பட்டன. மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. ஆனால் மோப்பநாய் சிறிது தூரம் ஓடிச்சென்று நின்று விட்டது. மோப்ப நாய் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக கொள்ளையர்கள் வீட்டில் மிளகாய்பொடியை தூவியுள்ளனர்.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இதைத்தொடர்ந்து வீட்டை சுற்றிலும் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால் கொள்ளையர்கள் விவரமாக கண்காணிப்பு கேமராவில் பதிவான ஹார்ட் டிஸ்கை எடுத்து சென்று விட்டனர். எனவே பழைய குற்றவாளிகள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகிறார்கள். இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த கொள்ளை குறித்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதேபோல் கொள்ளை நடந்த வீட்டில் எடுக்கப்பட்ட கைரேகைகளை பழைய குற்றவாளிகளின் கைரேகைகளுடன் ஒப்பிட்டும், சந்தேகப்படும் படியான நபர்களை பிடித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story