வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தவர்களை தாக்கி 16 பவுன் நகைகள் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை


வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தவர்களை தாக்கி 16 பவுன் நகைகள் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 28 Feb 2020 12:00 AM GMT (Updated: 27 Feb 2020 6:55 PM GMT)

கீழ்வேளூர் அருகே வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தவர்களை தாக்கி பெண்கள் அணிந்திருந்த தாலி சங்கிலி உள்பட 16 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சிக்கல்,

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள பொரவச்சேரி தண்டபாணி கோவில் பின்புறம் உள்ள நாடார் தெருவில் வசித்து வருபவர் பன்னீர்செல்வம்(வயது 62). இவர், அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் உள்ள அறையில் இவர் தூங்கிக்கொண்டு இருந்தார்.

வீட்டிற்குள் பன்னீர்செல்வத்தின் மனைவி பொன்னேஸ்வரி(52), தங்கை ராணி(51) ஆகிய இருவரும் படுத்து இருந்தனர். நள்ளிரவு 1 மணி அளவில் திடீரென இருவரும் அலறும் சத்தம் கேட்டு பன்னீர்செல்வம் படுக்கையை விட்டு எழுந்து அறையில் இருந்து வெளியில் வந்து பார்த்தார்.

இரும்பு கம்பியால் தாக்கி நகைகள் கொள்ளை

அப்போது மர்ம மனிதர்கள் 3 பேர், இரும்பு கம்பியால் பொன்னேஸ்வரி, ராணி இருவரையும் தாக்கிக்கொண்டு இருப்பதை பார்த்ததும் உடனடியாக ஓடிச்சென்று மர்ம மனிதர்கள் மேலும் தாக்காமல் தடுத்தார். ஆனாலும் அந்த மர்ம நபர்கள் தாக்கியதை நிறுத்தாமல் ராணி அணிந்து இருந்த 7 பவுன் தாலி சங்கிலி மற்றும் பொன்னேஸ்வரி அணிந்து இருந்த 5 பவுன் தாலி சங்கிலி ஆகியவற்றை அறுத்து எடுத்துக்கொண்டனர்.

பின்னர் பன்னீர்செல்வத்தையும் தாக்கி அவர் அணிந்து இருந்த 3 பவுன் தங்க சங்கிலி மற்றும் 1 பவுன் மோதிரம் ஆகியவற்றையும் பறித்துக்கொண்டு வீட்டின் பின்புறமாக ஓடி விட்டனர். மர்ம மனிதர்கள் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த 3 பேரும் வீட்டிற்கு வெளியே வந்து சத்தம் போட்டனர். அவர்களின் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் அங்கு வந்து பார்த்தனர்.

மருத்துவமனையில் அனுமதி

இந்த சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த பொன்னேஸ்வரி, ராணி, பன்னீர்செல்வம் ஆகிய 3 பேரும் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த கொள்ளை சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும் கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.

நாகையில் இருந்து கைரேகை நிபுணர்கள் வந்து கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். போலீஸ் மோப்ப நாய் ‘துலிப்’ அங்கு வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து ஓடிச்சென்று அருகில் உள்ள சிக்கல் ரயில்வே ஸ்டே‌‌ஷனில் படுத்துக்கொண்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

வலைவீச்சு

கொள்ளை சம்பவம் நடந்த வீட்டிற்கு நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் தாக்கி பெண்கள் அணிந்து இருந்த தாலிச்சங்கிலி உள்பட 16 பவுன் நகைகளை கொள்ளையடித்துச்சென்ற மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

கடந்த மாதம் 30-ந் தேதி பொரவச்சேரி மெயின் ரோட்டில் வசித்து வரும் ஆசிரியர் வீட்டின் கதவை உடைத்து நகைகள் திருடப்பட்டது. அதேபோல் ஒரு மாதத்திற்குள் இரண்டாவதாக நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் வசித்து வரும் பொதுமக்களிடம் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story