அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் - ஆசிரியர் கழகம் கோரிக்கை


அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் - ஆசிரியர் கழகம் கோரிக்கை
x
தினத்தந்தி 8 March 2020 10:15 PM GMT (Updated: 8 March 2020 8:34 PM GMT)

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

சிவகங்கை,

தமிழக தமிழாசிரியர் கழக மாநில பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் மருதவாணன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ராம்குமார் வரவேற்று பேசினார். மாநில சிறப்பு தலைவர் ஆறுமுகம், பொது செயலாளர் நாகேந்திரன், பொருளாளர் கோவிந்தன், அமைப்பு செயலாளர் ஆனந்தன், மாவட்ட நிர்வாகிகள் கரிகாலன், நடன சுந்தரம், மீனாட்சிசுந்தரம், திருப்பதி, ரமேஷ், தொல்காப்பியன், அக்கின பாண்டி, முத்துமுருகன், புகழேந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:- சென்னை மாநகராட்சி பகுதியில் மட்டும் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள காலை உணவு திட்டத்தை மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் நகராட்சி பள்ளிகளுக்கு விரிவுபடுத்த வேண்டும். ஆங்கிலம், கணிதம், அறிவியல் என அனைத்து பாடத்திட்டங்களுக்கும் கடைசியாக தமிழ் பாடத்தை நிலைபடுத்தி அரசாணை வெளியிட்டு உள்ளனர்.

பள்ளிகளில் காலியாக உள்ள தமிழாசிரியர் பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும். அரசு தேர்வுகளில் இருந்த தமிழ் 2-ம் தாளை நீக்கியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மாணவர்களின் அறிவு திறனை வளர்க்கும் தமிழ் 2-ம் தாளை மீண்டும் அமல்படுத்தி அக மதிப்பெண் அடிப்படையில் 20 மதிப்பெண்கள் வழங்க தமிழக பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்கள் மீது போராட்ட காலங்களில் போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்.

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இ்வ்வாறான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story