பெண்ணை அடித்து கொன்ற வழக்கில் கணவர் கைது பரபரப்பு வாக்குமூலம்


பெண்ணை அடித்து கொன்ற வழக்கில் கணவர் கைது பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 21 March 2020 11:15 PM GMT (Updated: 21 March 2020 9:21 PM GMT)

அரகண்டநல்லூர் அருகே பெண்ணை அடித்து கொன்ற வழக்கில் கைதான கணவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

திருக்கோவிலூர்,

அரகண்டநல்லூர் போலீஸ் சரகம் ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் பிரபு(வயது 37). இவரது மனைவி ராஜகுமாரி(33). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். நேற்றுமுன்தினம் ஆரோக்கியராஜ் பிரபு தனது மனைவி ராஜகுமாரியை (வயது 33) மரக்கட்டையால் அடித்து கொலை செய்தார். இது தொடர்பாக அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆரோக்கியராஜ்பிரபுவை நேற்று கைது செய்தனர். மனைவியை கொலை செய்தது ஏன்? என்று அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் எனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் சென்னையில் தங்கி கூலி வேலை செய்து வந்தேன். எனக்கு குடிப்பழக்கம் இருப்பதால் எனது மனைவியும் குடிக்க ஆரம்பித்தாள். இதனை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நாளடைவில் குடிக்கு அடிமையானது போல் அவளது நடவடிக்கை மாறியது. அதோடு அவளுக்கு திருநங்கைகளுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த தகவல் நான் குடியிருந்த வீட்டு உரிமையாளருக்கும் தெரியவரவே வீட்டை காலி செய்யுமாறு அவர் கூறினார்.

கொன்று விடுவேன்

இதனால் வேறு வழியின்றி சொந்த ஊரான ஆலம்பாடி கிராமத்திற்கே வந்துவிட்டேன். சுமார் 1 வருட காலமாக ஆலம்பாடியில் தங்கி பிழைப்பு தேடிவந்தேன். சரியான வேலை கிடைக்கவில்லை. இதனால் எனக்கு பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. எனவே வேறுவழியில்லாமல் நான் மட்டும் மீண்டும் சென்னைக்கே சென்று வேலை செய்யலாம், மனைவியும் பிள்ளைகளும் சொந்த ஊரிலேயே இருக்கலாம் என முடிவு செய்து என் மனைவிடம் சொன்னபோது அதனை ஏற்க மறுத்ததுடன், நானும்சென்னைக்கு வருவேன் என கூறி தகராறு செய்ய ஆரம்பித்துவிட்டாள். அவளை அழைத்துச்செல்லாவிட்டால் என்னையும், 2 குழந்தைகளையும் கொன்று விடுவேன் எனவும் மிரட்டினாள். இதனால் அருகில் கிடந்த மரக்கட்டையை எடுத்து ராஜகுமாரியின் தலையில் அடித்து கொன்றேன்.

இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறியுள்ளார். 

Next Story