கர்நாடகத்தில் ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 78 ஆக உயர்வு


கர்நாடகத்தில் ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 78 ஆக உயர்வு
x
தினத்தந்தி 28 March 2020 11:55 PM GMT (Updated: 28 March 2020 11:55 PM GMT)

கர்நாடகத்தில் நேற்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் அந்த வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து மாநில அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா வைரசுக்கு 61 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மாநிலத்தில் நேற்று மேலும் 17 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்கி ஏற்கனவே 3 பேர் மரணம் அடைந்துள்ளனர். புதிதாக பாதிக்கப்பட்டோரின் விவரம் வருமாறு:-

உத்தர கன்னடா மாவட்டத்தை சேர்ந்த 54 வயது நபருக்கு அந்த வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. அவர் உத்தர கன்னடாவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது மனைவிக்கு ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தர கன்னடா மாவட்டத்தை சேர்ந்த 28 மற்றும் 23 வயது பெண்களுக்கு அந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் ஏற்கனவே கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருபவரின் மகள்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூருவை சேர்ந்த 21 வயது இளைஞர் லண்டன் சென்றுவிட்டு கடந்த 17-ந் தேதி பெங்களூரு வந்தார். அவருக்கு தற்போது அந்த வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இந்துப்பூரை சேர்ந்த 23 வயது இளைஞருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர், ஏற்கனவே கொரோனா நோயாளி ஒருவருடன் தொடர்பில் இருந்தார். அவர் சிக்பள்ளாப்பூரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். சிக்பள்ளாப்பூரை சேர்ந்த 70 வயது முதியவருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. அவரும், கொரோனா பாதித்த ஒருவருடன் தொடர்பில் இருந்துள்ளார். அவரும் சிக்பள்ளாப்பூரில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சிக்பள்ளாப்பூரை சேர்ந்த 32 வயது இளம் பெண்ணுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரும், கொரோனா நோயாளி ஒருவருடன் தொடர்பில் இருந்துள்ளார். அவரும் சிக்பள்ளாப்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்துப்பூரை சேர்ந்த 18 வயது இளைஞருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. அவரும் சிக்பள்ளாப்பூரில் ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பெங்களூருவைசேர்ந்த 63 வயது பெண் லண்டன் சென்றுவிட்டு கடந்த 16-ந் தேதி பெங்களூரு திரும்பினார். அவருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. அவர் பெங்களூருவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும் தாவணகெேரயை சேர்ந்த 20 வயது வாலிபர் மற்றும் உத்தரகன்னடாவை சேர்ந்த 24 வயது வாலிபர் ஆகியோருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இவர்கள் 2 பேரும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது. மைசூருவை சேர்ந்த 5 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story