ஓசூரில் ஊரடங்கை மீறி இயங்கிய நிறுவனத்திற்கு ‘சீல்’ - அதிகாரிகள் நடவடிக்கை


ஓசூரில் ஊரடங்கை மீறி இயங்கிய நிறுவனத்திற்கு ‘சீல்’ - அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 27 April 2020 11:00 PM GMT (Updated: 27 April 2020 8:03 PM GMT)

ஓசூரில், ஊரடங்கு உத்தரவை மீறி இயங்கிய தனியார் நிறுவனத்திற்கு, தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ‘சீல்’ வைத்தனர்.

ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து ராயக்கோட்டை செல்லும் சாலையில் சானசந்திரம் பிரிவு அருகே எம்.டி., பேப் என்ற இரும்பு உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. ஊரடங்கு உத்தரவை மீறி இந்த நிறுவனம் இயங்கி வருவதாக ஓசூர் தாசில்தார் வெங்கடேசனுக்கு நேற்று தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரது தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், டவுன் போலீசார் பாதுகாப்புடன், நேற்று மதியம் தனியார் நிறுவனத்தில் ஆய்வு செய்தனர். அப்போது, ஊரடங்கு உத்தரவை மீறி உரிய அனுமதி பெறாமல் தனியார் நிறுவனம் இயங்கி வந்தது தெரிந்தது.

மேலும், 5 வட மாநில தொழிலாளர்கள் உள்பட 20 பேர் போதிய சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணியாற்றி வந்ததும், கடந்த வாரம் வேலூரில் இருந்து இந்நிறுவனத்திற்கு வேலை செய்ய வந்த வாலிபரை தனிமைப்படுத்தாமல் வேலை செய்ய வைத்ததும் தெரியவந்தது.

இதனால் தனியார் நிறுவனத்திற்கு தாசில்தார் வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் ‘சீல்’ வைத்தனர்.

Next Story