சிக்கதாசம்பாளையத்தில் ரூ.30½ கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அடிக்கல் நாட்டினார்


சிக்கதாசம்பாளையத்தில் ரூ.30½ கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அடிக்கல் நாட்டினார்
x
தினத்தந்தி 29 Jun 2020 10:34 PM GMT (Updated: 29 Jun 2020 10:34 PM GMT)

சிக்கதாசம்பாளையத்தில் ரூ.30½ கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

மேட்டுப்பாளையம் ,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிக்கதாசம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 7 வது வார்டில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகே தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ரூ.30 கோடியே 49 லட்சத்தில் 352 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

விழாவுக்கு கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. ஏ.கே.செல்வராஜ், ஓ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு அடுக்குமாடி கட்டிடங்கள் கட்ட அடிக்கல் நாட்டியும், பூமி பூஜை செய்தும் பணிகளை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் அடிப்படை தேவைகளில் ஒன்றாக குடியிருப்புகள் விளங்குகிறது. அந்த வகையில் ஏழை-எளிய மக்களின் கனவாக இருந்த குடியிருப்பு தேவை என்பது தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் நினைவாகி உள்ளது. மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிக்கதாசம்பாளையத்தில் 0.93 ஏக்கர் பரப்பளவில் 352 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி தற்போது தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

இதில் ஒவ்வொரு வீடும் வரவேற்பறை, படுக்கை அறை, சமையலறை, பால்கனி, கழிப்பறை மற்றும் குளியலறையுடன் 400 சதுர அடி பரப்பளவில் அமையும். ஆற்றங்கரை ஓரத்தில் வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய குடிசைவாசிகள் இங்கு குடியமர்த்தப்படுவார்கள். ஒவ்வொரு வீடும் நிலமதிப்பு இல்லாமல் ரூ.8 லட்சத்து 66 ஆயிரம் ஆகும்.

இதுபோன்று ஜவர்கலால் நேரு தேசிய புனரமைப்பு திட்டம் மூலம் கோவை மாநகராட்சியில் ஆட்சேபகரமான அரசு நிலங்களில் அடிப்படை வசதிகள் இல்லாமல் வசித்து வரும் குடிசைப்பகுதி மக்கள் திட்டத்தின் கீழ் 396 சதுரஅடி பரப்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் அனைத்து வசதிகளுடன் கட்டி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட 11 திட்டப்பகுதிகளில் 10 ஆயிரத்து 728 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு சீர்மிகு திட்டத்துக்காக மாநகராட்சிக்கு உட்பட்ட நீர்நிலைப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அங்கு வசித்து வந்தவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் பங்களிப்புடன் குடியிருப்புகள் கட்டுதல் திட்டத்தில் சொந்த வீடு, நிலம் இல்லாமல் ஆட்சேபகரமான அரசு நிலங்கள், நீர்நிலைகளுக்கு அருகில் வசிக்கும் ஏழை எளிய மக்களை மறு குடியமர்த்தும் வகையில் 400 சதுரஅடி பரப்பில் அனைத்து வசதிகளுடன் பல்வேறு திட்டப்பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி 928 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும் 4 ஆயிரத்து 17 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. மீதமுள்ள 5 ஆயிரத்து 359 குடியிருப்புகள் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மானியத்துடன் பயனாளிகளே வீடு கட்டும் திட்டத்தில் 300 சதுரஅடி பரப்பில் புதிய கான்கிரீட் கூரை வீடுகளை கட்ட 4 தவணைகளாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ் 20 ஆயிரத்து 733 குடியிருப்புகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டு 7 ஆயிரத்து 783 பயனாளிகள் வீடுகள் கட்டி முடித்து உள்ளனர். 5 ஆயிரத்து 609 பயனாளிகள் வீடுகள் கட்டி வருகிறார்கள். 7 ஆயிரத்து 341 வீடுகள் கட்டி முடிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அமைச்சர் அங்குள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்திற்கு சென்றார். அப்போது அங்கு நுழைவு வாயிலில் வைக்கப்பட்டு இருந்த கிருமிநாசினியில் கைகளை சுத்தம் செய்தார். தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலையை கண்டறிந்தார். அதன் பின்னர் அவர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

விழாவில் குன்னூர் எம்.எல்.ஏ. சாந்திராமு, கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் ,மேட்டுப்பாளையம் தாசில்தார் சாந்தாமணி, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் நாசர், மாவட்ட கவுன்சிலர் பி.டி. கந்தசாமி, கோவை மாவட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளன துணைத் தலைவர் ரவிக்குமார், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலை மகேந்திரன், காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா, சிக்கதாசம்பாளையம் ஊராட்சி தலைவர் விமலா, துணைத்தலைவர் வினோத்குமார், வார்டு உறுப்பினர் வெண்ணிலா, ஊராட்சி தலைவர்கள் ஞானசேகரன், பூபதி, வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் வான்மதி சேட், அரசு வக்கீல் செந்தில்குமார், குடிசைப்பகுதி மாற்று வாரிய உதவி நிர்வாக பொறியாளர் ரமேஷ், மேற்பார்வை பொறியாளர் எட்வின்சாம் மற்றும் கட்சி பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைபிடித்தனர்.

Next Story