நெல்லை, தென்காசியில் பி.எஸ்.என்.எல். ஊழியர் உள்பட 2 பேர் கொரோனாவுக்கு பலி


நெல்லை, தென்காசியில் பி.எஸ்.என்.எல். ஊழியர் உள்பட 2 பேர் கொரோனாவுக்கு பலி
x
தினத்தந்தி 23 Sep 2020 10:06 PM GMT (Updated: 23 Sep 2020 10:06 PM GMT)

நெல்லை, தென்காசியில் பி.எஸ்.என்.எல். ஊழியர் உள்பட 2 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள்.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று பாளையங்கோட்டை அருகே உள்ள பர்கிட்மாநகர் அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் 2 பேர், பாளையங்கோட்டை போலீஸ்காரர் ஒருவர், ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி செவிலியர் ஒருவர், செட்டிகுளம் அரசு ஆஸ்பத்திரி ஊழியர் ஒருவர், 100 நாள் வேலைத்திட்டத்தில் செங்குளம் பகுதிகளில் பணியாற்றிய தொழிலாளர்கள் 5 பேர் உள்பட 92 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து அவர்கள் பணியாற்றிய இடத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் அவர்களுடன் பணியாற்றியவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று பி.எஸ்.என்.எல். ஊழியர் ஒருவர் இறந்தார்.

நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை 12 ஆயிரத்து 81 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 10 ஆயிரத்து 961 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 925 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 195 பேர் இறந்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதில் ஆலங்குளம், கடையம், கடையநல்லூர், கீழப்பாவூர், குருவிகுளம், சங்கரன்கோவில், செங்கோட்டை, தென்காசி, வாசுதேவநல்லூர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் அடங்குவர். நேற்று முதியவர் ஒருவர் பரிதாபமாக இறந்தார். மாவட்டத்தில் இதுவரை 6 ஆயிரத்து 961 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சை முடிந்து 6 ஆயிரத்து 273 பேர் வீடு திரும்பி உள்ளனர். 558 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 130 பேர் இறந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 55 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 71 ஆக உயர்ந்தது. 12 ஆயிரத்து 201 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 750 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 122 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக இறந்துள்ளனர்.

Next Story