தர்மபுரி மாவட்டத்தில் ரூ.54 கோடி மதிப்பில் சாலைகளை தரம் உயர்த்தும் பணி கோட்ட பொறியாளர் தகவல்


தர்மபுரி மாவட்டத்தில் ரூ.54 கோடி மதிப்பில் சாலைகளை தரம் உயர்த்தும் பணி கோட்ட பொறியாளர் தகவல்
x
தினத்தந்தி 25 Sep 2020 3:24 AM GMT (Updated: 25 Sep 2020 3:24 AM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் ரூ.54 கோடி மதிப்பில் சாலைகளை தரம் உயர்த்தும் பணி நடைபெற்று வருகிறது என்று நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் தெரிவித்தார்.

தர்மபுரி,

தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பில் தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் செல்வநம்பி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது நவலை- பெரமாண்ட பட்டி சாலையில் ரூ.11.60 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணியை பார்வையிட்டார். இந்த ஆய்வில் நபார்டு மற்றும் கிராம சாலைகள் உதவி கோட்ட பொறியாளர்கள் சுரேஷ்குமார், ரஞ்சினி பிளாரன்ஸ், பொறியாளர்கள் கல்பனா, குரு பிரகாஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

ரூ.54 கோடி மதிப்பில்

இந்த ஆய்வின்போது கோட்ட பொறியாளர் செல்வநம்பி கூறியதாவது:- தர்மபுரி மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு சாலைகளை மேம்படுத்தவும், உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கவும், தமிழக முதல்-அமைச்சர் உத்தரவுப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நபார்டு மற்றும் கிராம சாலைகள் கோட்டத்தை சேர்ந்த நவலை-பெரமாண்டபட்டி சாலையில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இதேபோல் தர்மபுரி மாவட்டத்தில் 78 கி.மீட்டர் நீளம் உள்ள ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளை இதர மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்தும் பணிகள் ரூ.54 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பிக்கம்பட்டி சாலை முதல் பாலக்கோடு சாலை வரை தரம் உயர்த்தப்படுகிறது. இந்த பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story