வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் முத்தரசன் வலியுறுத்தல்


வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் முத்தரசன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 5 Jan 2021 3:37 AM GMT (Updated: 5 Jan 2021 3:37 AM GMT)

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.

பேராவூரணி,

தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எஸ்.டி.பி.ஐ. மாவட்ட பொதுச்செயலாளர் சாகுல் அமீது தலைமை தாங்கினார்.

பேரூராட்சி முன்னாள் தலைவர் அசோக்குமார், சேதுபாவாசத்திரம் வட்டார காங்கிரஸ் தலைவர, சேக் இப்ராஹிம்ஷா, புதுக்கோட்டை மாவட்ட எஸ்.டி.பி.ஐ. செயலாளர் ஜியாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் இத்ரீஸ்கான் வரவேற்றார். கொட்டும் மழையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

மக்களை பாதிக்கும்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்து கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர். விவசாய திருத்த சட்டங்கள் விவசாயிகளை மட்டும் பாதிக்காது. 130 கோடி இந்திய மக்களையும் பாதிக்கும். கேரளாவைப்போல தமிழகத்திலும் சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்டி வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. சிங்காரம், எஸ்.டி.பி.ஐ. மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக், தமிழக மக்கள் புரட்சிக்கழக மாநில தலைவர் அரங்க.குணசேகரன், திராவிடர் கழக மாவட்ட செயலாளர் சிதம்பரம், மனிதநேய ஜனநாயக கட்சி விவசாய அணி மாநில செயலாளர் சலாம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் எஸ்.டி.பி.ஐ. மாவட்ட செயலாளர் முகமது அஸ்கர் நன்றி கூறினார்.

பாபநாசம்

வேளாண் அவசர சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் பாபநாசம் மேலவீதி அண்ணா சிலை அருகில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு பாபநாசம் ஒன்றிய செயலாளர் அஷ்ரப் அலி தலைமை தாங்கினார். மாநில மருத்துவ சேவை அணி துணை செயலாளர் முகமது மகரூப், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் தில்லைவனம், விவசாய சங்க மாநிலக்குழு உறுப்பினர் சாமு தர்மராஜன், மாநில வர்த்தக அணி செயலாளர் யூசுப் ராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால் சேட், மாவட்ட செயலாளர் சேக் முகமது அப்துல்லா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story