காஞ்சீபுரம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை 2 பேர் கைது


காஞ்சீபுரம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை 2 பேர் கைது
x
தினத்தந்தி 25 March 2021 3:05 PM GMT (Updated: 25 March 2021 3:05 PM GMT)

காஞ்சீபுரம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரத்தை அடுத்த தாயார் அம்மன் குளம் பகுதியை சேர்ந்தவர் சூலை கருப்பு என்கி்ற வடிவேல் (வயது 30), இவர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருந்தார். தற்போது அவர் கட்டிட வேலை செய்து வந்தார்.

இந்தநிலையில் வடிவேல் அந்த பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் இரவு தூங்கி கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் அவரை கத்தியால் சரமாரியாக வெட்டியும், செங்கற்களால் கடுமையாக தாக்கியும் உள்ளனர். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர் வருவதை அறிந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இதில் வடிவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்

இது சம்பந்தமாக அந்த பகுதியை சேர்ந்த சதீஷ் (25),செல்வம் (24) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது.

Next Story