மறைந்த வே.ஆனைமுத்து உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி


மறைந்த வே.ஆனைமுத்து உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி
x
தினத்தந்தி 7 April 2021 5:07 AM GMT (Updated: 7 April 2021 5:07 AM GMT)

சென்னை அடுத்த தாம்பரம் பகுதியில் வசித்து வந்தவர் ஆனைமுத்து (வயது 96). மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சி தலைவரான இவர், நேற்று உடல் நலக்குறைவு காரணமாக புதுச்சேரியில் உயிரிழந்தார்.

தாம்பரம்,

சென்னை அடுத்த தாம்பரம் பகுதியில் வசித்து வந்தவர் ஆனைமுத்து (வயது 96). மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சி தலைவரான இவர், நேற்று உடல் நலக்குறைவு காரணமாக புதுச்சேரியில் உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்துவதற்காக தாம்பரத்தில் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு மறைந்த ஆனைமுத்து உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது, தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., தாம்பரம் எம்.எல்.ஏ., எஸ்.ஆர். ராஜா மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உடன் வந்தனர்.

அதைத்தொடர்ந்து, மறைந்த ஆனைமுத்து உடல் மருத்துவ ஆராய்ச்சிக்காக ராமச்சந்திரா மருத்துவமனைக்கு தானம் செய்யப்பட்டது. ஆனைமுத்துவின் மனைவி சுசீலா அம்மையார் காலமாகி விட்டார். இவர்களுக்கு 4 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.

மறைந்த ஆனைமுத்து அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு, தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு 50 சதவீதமாக உயர்த்துவதற்கு பாடுபட்டவர். 

Next Story