கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி: செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்த காய்கறி வியாபார கடைகளில் சில்லரை விற்பனைக்கு தடை


கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி: செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்த காய்கறி வியாபார கடைகளில் சில்லரை விற்பனைக்கு தடை
x
தினத்தந்தி 10 April 2021 4:17 AM GMT (Updated: 10 April 2021 4:17 AM GMT)

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் நேற்று நிருபர்களை சந்தித்து பேசினார்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் நேற்று நிருபர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா தொற்று தடுப்பு நடைமுறைகள் சரியாக பின்பற்றாத காரணத்தால் வைரஸ் வேகமாக பரவி வருவதாக தெரிவித்த அவர், செங்கல்பட்டு மாவட்டத்தில் நோய்த்தொற்று உள்ளவர்களை வீட்டுக்காவலில் வைத்து 14 நாட்கள் கண்காணிப்பதாகவும், மாவட்டத்தில் முதலில் 70 சோதனை முகாம்கள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது 100 முகாம்களாக கூடுதலாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், தாம்பரம், செங்கல்பட்டு ஆகிய அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதி உள்ளதாக தெரிவித்த அவர், ஒருநாளைக்கு சராசரியாக 1,000 பேர் வரை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார். புனித தோமையார் மலை, காட்டாங்கொளத்தூர், திருப்போரூர் உள்ளிட்ட ஒன்றியங்களில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதாகவும், மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்தும் வரும் பயணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் கூறினார். செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் முக கவசம் அணியாமல் வெளியில் செல்ல வேண்டாம் எனவும், இதுவரையில் 1 லட்சத்து 33 ஆயிரம் பேர் முதல்நிலை தடுப்பூசி போட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் தாம்பரம், செங்கல்பட்டு நகராட்சிகளில் உள்ள சில்லறை விற்பனை கடைகள் மூடப்படும் எனவும் தெரிவித்தார்.

 


Next Story