சென்னை விமான நிலையத்தில் கொல்கத்தா செல்ல வந்த 3 பயணிகளுக்கு கொரோனா தொற்று; பயணத்தை ரத்து செய்து ஆஸ்பத்திரியில் அனுமதி


சென்னை விமான நிலையத்தில் கொல்கத்தா செல்ல வந்த 3 பயணிகளுக்கு கொரோனா தொற்று; பயணத்தை ரத்து செய்து ஆஸ்பத்திரியில் அனுமதி
x
தினத்தந்தி 14 May 2021 10:24 AM GMT (Updated: 14 May 2021 10:24 AM GMT)

சென்னை விமான நிலையத்தில் பெங்களூரு வழியாக கொல்கத்தா செல்ல வந்த 3 பயணிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிந்ததால் அவர்களின் பயணத்தை ரத்து செய்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

கொல்கத்தா செல்ல வந்தனர்
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு செல்லும் விமானத்தில் 65 பயணிகள் பயணம் செய்ய இருந்தனர். அவர்களின் மருத்துவ சான்றிதழ்களை விமான நிறுவன அதிகாரிகள் பரிசோதித்தனர்.அப்போது மேற்கு வங்காள மாநிலத்தை சோ்ந்த 3 ஆண் பயணிகள், பெங்களூரு வழியாக கொல்கத்தா செல்ல வந்து இருந்தனா். சென்னையில் கட்டிட தொழிலாளா்களாக பணியாற்றி வந்்த அவர்கள், கொரோனா அதிகரிப்பு காரணமாக சொந்த ஊா் திரும்ப வந்திருந்தனர்.

3 பேருக்கு கொரோனா
அவர்கள் 3 பேரின் மருத்துவ சான்றிதழ்களை பரிசோதித்தபோது, 3 பேருக்கும் கொரோனா தொற்று இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து 3 பேரின் பயணத்தையும் அதிகாரிகள் ரத்து செய்தனா்.ஆனால் 3 பயணிகளும் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனா். “நாங்கள் எங்களுடைய மாநிலத்துக்கு சென்று சிகிச்சை பெற்று கொள்கிறோம். எங்களை விமானத்தில் பயணிக்க அனுமதியுங்கள்” என்றனா்.ஆனால் அதிகாரிகள் உறுதியாக மறுத்துவிட்டனா். அதோடு விமான நிலைய மருத்துவக்குழுவினருக்கும் தகவல் கொடுத்தனா்.

ஆஸ்பத்திரியில் அனுமதி
விமான நிலைய மருத்துவக்குழுவினா் விரைந்து வந்து 3 பேருக்கும் கொரோனா பாதுகாப்பு கவச உடைகள் அணிய செய்து தனி ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனா்.பின்னர் சென்னை உள்நாட்டு விமான நிலையம் புறப்பாடு பகுதி முழுவதும் கிருமிநாசினி மருந்து தெளித்து சுத்தப்படுத்தினா். சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட 3 பயணிகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story