கணவன், மனைவி கொலை வழக்கில் கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் கொலையாளிகளை பிடிக்கும் பணி தீவிரம்


கணவன், மனைவி கொலை வழக்கில் கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் கொலையாளிகளை பிடிக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 19 July 2021 1:01 AM GMT (Updated: 19 July 2021 1:01 AM GMT)

கணவன், மனைவி கொலை வழக்கில் கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் கொலையாளிகளை பிடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரை அடுத்த கொளப்பாக்கம் அண்ணா நகர், அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சாம்சன் தினகரன் (வயது 65). இவரது 2-வது மனைவி ஜெனட்(52). இவர்கள் இருவரையும் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் கொலை செய்து அவரது வீட்டில் உள்ள குடிநீர் தொட்டியில் உடலை வீசிவிட்டு சென்றனர்.

கணவன்-மனைவி கொலை குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் கொலை நடந்த வீட்டை செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் நேரில் ஆய்வு செய்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினார். மேலும் மோப்பநாய் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. பின்பு அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

கண்காணிப்பு கேமரா காட்சிகள்

மேலும் கைரேகை நிபுணர்கள் வீட்டில் இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இதனையடுத்து செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாரியின் உத்தரவின்பேரில் கொலை சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்த போது அதில் மர்ம நபர்கள் சிலர் கணவன், மனைவி கொலை செய்யப்பட்ட வீட்டின் தெருவில் அடிக்கடி வந்து செல்வது தெரிய வந்துள்ளது.

இது குறித்து ஒரு உயர் போலீஸ் அதிகாரி கூறுகையில்:-

கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளின் அடிப்படையில் கணவன் மனைவி கொலை வழக்கில் சந்தேகப்பட கூடிய நபர்களின் உருவம் தெளிவாக பதிவாகி உள்ளது. எனவே மிக விரைவில் இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்வோம். மேலும் இந்த கொலை சம்பவம் நகை, பணத்திற்காக நடந்ததா? அல்லது அவர்களது சொத்துகளை அபகரிப்பதற்காக நடைபெற்றதா? என்பது குறித்தும் தீவிரமாக விசாரித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story