10.5 சதவீத இடஒதுக்கீட்டை சட்டப்பூர்வமாக உறுதி செய்வதோடு சாதிவாரி, மொழிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்


10.5 சதவீத இடஒதுக்கீட்டை சட்டப்பூர்வமாக உறுதி செய்வதோடு சாதிவாரி, மொழிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்
x
தினத்தந்தி 29 July 2021 1:14 AM GMT (Updated: 29 July 2021 1:14 AM GMT)

10.5 சதவீத இடஒதுக்கீட்டை சட்டப்பூர்வமாக உறுதி செய்வதோடு சாதிவாரி, மொழிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் சீமான் வலியுறுத்தல்.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பெருத்த தமிழ் சமூகத்திற்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீட்டை அளித்து உத்தரவிட்டிருக்கும் தமிழக அரசின் முடிவு சரியான முன்நகர்வாகும். ஆண்டாண்டு காலமாகப் பிறப்பின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டு, ஒடுக்கப்பட்ட தமிழ் சமூகங்களுக்கான பிரதிநிதித்துவத்தையும், வாய்ப்பையும் அச்சமூகத்தையே அளவீடாகக் கொண்டு கல்வி, வேலைவாய்ப்புகளில் உறுதிப்படுத்துவதே சமூக நீதியாகும்.

அதற்கேற்ப, தமிழகத்தில் நிலைப்படுத்தப்பட்டுள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டில் 10.5 ஒதுக்கீட்டை மிகவும் பிற்படுத்தப்பட்ட தமிழ் சமூகத்திற்கு உறுதிப்படுத்தி அரசாணை வெளியிட்டிருப்பது நீண்டநெடியக் காலமாக அக்கோரிக்கைக்காகப் போராடிய மக்களின் மேம்பாட்டுக்குப் பெரிதும் உதவும் என நம்புகிறேன்.

அதேசமயம், இத்தகைய இடஒதுக்கீட்டுக்கு எத்தகைய சட்டச்சிக்கலும் ஏற்படாதிருக்க, சாதிவாரிக் கணக்கெடுப்பை உடனடியாக நடத்தி, 10.5 சதவீத இடஒதுக்கீட்டை சட்டப்பூர்வமாக உறுதி செய்வதோடு, எல்லா சமூகங்களுக்குமான பிரதிநிதித்துவத்தை மக்கள் தொகைக்கேற்ப சரிசமமாகப் பகிர்ந்தளிக்க முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன். இத்தோடு, மொழிவாரிக் கணக்கெடுப்பையும் நடத்தி அதன் முடிவை முன்வைக்க வேண்டுமெனக் கோருகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story