ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள 7 தமிழர்களின் விடுதலையை உறுதி செய்ய வேண்டும்


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள 7 தமிழர்களின் விடுதலையை உறுதி செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 6 Aug 2021 2:01 PM GMT (Updated: 6 Aug 2021 2:01 PM GMT)

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள 7 தமிழர்களின் விடுதலையை உறுதி செய்ய வேண்டும் மு.க.ஸ்டாலினுக்கு, சீமான் வலியுறுத்தல்.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரியானா மாநில வழக்கொன்றில் தீர்ப்பளித்துள்ள சுப்ரீம் கோர்ட்டு, 14 ஆண்டுகள் தண்டனை முடித்த சிறைவாசிகளின் விடுதலையை மாநில அரசே முடிவு செய்து அறிவிக்கலாம் எனக் கூறியிருக்கிறது. 14 ஆண்டுகளுக்கு மேலான காலம் தண்டனை அனுபவித்த சிறைவாசிகளின் தண்டனைக்குறைப்பு மற்றும் விடுதலை குறித்த முடிவை எடுக்க மாநில அரசுக்கு அதிகாரமுண்டு என வந்திருக்கும் இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

இது ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் 7 தமிழர்களின் விடுதலைக்கான முன்நகர்வுக்கு உதவிகரமாக இருக்குமென பெரிதும் நம்புகிறேன். எனவே 7 பேர் விடுதலை செய்யும் நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு, தனது அமைச்சரவையைக் கூட்டி, 7 பேர் விடுதலையின் முடிவை மீண்டும் உறுதி செய்து, கவர்னருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதன்மூலம் அவர்களின் விடுதலையை சாத்தியப்படுத்தத் துணிய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story