1 முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து நிபுணர்கள் குழுவுடன் 19-ந் தேதி பசவராஜ் பொம்மை ஆலோசனை


1 முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து நிபுணர்கள் குழுவுடன் 19-ந் தேதி பசவராஜ் பொம்மை ஆலோசனை
x
தினத்தந்தி 16 Oct 2021 9:10 PM GMT (Updated: 16 Oct 2021 9:10 PM GMT)

கர்நாடகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து மந்திரிகள், நிபுணர்கள் குழுவினருடன் 19-ந் தேதி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வுகள் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு:

பள்ளிகளை திறக்க...

  கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இதையடுத்து, மாநிலத்தில் 6 முதல் 12-ம் வகுப்புகள் வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவிகளும் கொரோனா அச்சம் இன்றி பள்ளிகளுக்கு வருகை தருகின்றனர். இதனால் 6 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகளின் வருகைப்பதிவும் அதிகரித்து உள்ளது. அதே நேரத்தில் கடந்த 2 மாதங்களாக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு பெரிய அளவில் இல்லாததால், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளை திறக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் வலியுறுத்தி வருகின்றன.

  கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் தசரா விடுமுறைக்கு பின்பு 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கான பள்ளிகளை திறக்க அரசு தயாராக இருப்பதாகவும், நிபுணர்கள் குழுவினருடன் கலந்து ஆலோசித்து விட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஷ் தெரிவித்திருந்தார். அதே நேரத்தில் பள்ளிகளை திறக்கும் விவகாரத்தில் அரசு அவசரம் காட்டாது என்றும், மாணவ, மாணவிகளின் உடல் நலத்தில் அரசுக்கு அக்கறை இருப்பதாகவும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்திருந்தார்.

19-ந் தேதி ஆலோசனை

  இந்த நிலையில், கொரோனா பாதிப்பு குறைந்து விட்டதை தொடர்ந்து கர்நாடகத்தில் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கான பள்ளிகளை திறப்பது குறித்து வருகிற 19-ந் தேதி (நாளை மறுநாள்) மந்திரிகள், அதிகாரிகளுடன் பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் வைத்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்த உள்ளார். இதில், பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஷ், சுகாதாரத்துறை மந்திரி சுதாகர், போக்குவரத்து துறை மந்திரி ஸ்ரீராமுலு கலந்து கொள்ள உள்ளனர்.

  மேலும் அந்த துறைகளை சேர்ந்த மூத்த அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார்கள். அத்துடன் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழுவினரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பள்ளிகளை திறப்பது குறித்து, அரசுக்கு ஆலோசனைகள் வழங்க உள்ளனர். மந்திரிகள், அதிகாரிகள், நிபுணர்கள் குழுவினருடன் ஆலோசித்து, பள்ளிகளை திறப்பது குறித்து அன்றைய தினம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இறுதி முடிவு எடுக்க உள்ளார்.

கட்டுப்பாடுகளில் தளர்வு

  குறிப்பாக 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கான பள்ளிகளை அடுத்த வாரமே திறக்க அரசு முடிவு செய்திருப்பதாகவும், முதற்கட்டமாக ஒரு நாள் விட்டு, ஒரு நாள் பள்ளிகளை திறக்க அரசு ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. முதலில் ஒரு நாள் பள்ளியை திறப்பது, மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கவும் அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. மாணவர்களின் வருகைப்பதிவு மற்றும் கொரோனா நிலவரத்தை பரிசீலித்து 1 முதல் 5-ம் வகுப்புக்கான பள்ளிகளை தினமும் செயல்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கவும் அரசு சிந்தித்து வருகிறது.

  பள்ளிகளை திறப்பது போல, கொரோனா ஊரடங்கிலும் தளர்வுகள் செய்ய அரசு தீர்மானித்துள்ளது. குறிப்பாக கேரளா, மராட்டிய மாநிலங்களில் இருந்து வரும் நபர்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளில் தளர்வு செய்யவும் அரசு முடிவு செய்துள்ளது. இரவு நேர ஊரடங்கு தளர்வு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளில் தளர்வு செய்வது குறித்து வருகிற 19-ந் தேதி மந்திரிகள், நிபுணர்கள் குழுவினருடன் விரிவாக ஆலோசித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இறுதி முடிவு எடுக்க உள்ளார்.

Next Story