மாநிலங்களவை புதிய எம்.பி.க்களாக எல்.முருகன் உள்பட 12 பேர் பதவியேற்பு


மாநிலங்களவை புதிய எம்.பி.க்களாக எல்.முருகன் உள்பட 12 பேர் பதவியேற்பு
x

பிப்ரவரி மாதம் நடந்த தேர்தலில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய உறுப்பினர்கள் பதவியேற்று வருகின்றனர்.

புதுடெல்லி,

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரியாக பதவி வகித்து வரும் எல்.முருகன், மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார்.

இவர் உள்பட மாநிலங்களவையில் சுமார் 56 உறுப்பினர்களின் பதவிக்காலம் சமீபத்தில் நிறைவடைந்தது. 15 மாநிலங்களில் இருந்து காலியான இந்த இடங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் தேர்தல் நடந்தது.

இதில் மத்திய மந்திரி எல்.முருகன் மீண்டும் மத்திய பிரதேசத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதேநேரம் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் நீலகிரி தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராகவும் அவர் போட்டியிட்டு உள்ளார்.

இந்த நிலையில் பிப்ரவரி மாதம் நடந்த தேர்தலில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய உறுப்பினர்கள் பதவியேற்று வருகின்றனர்.

அந்தவகையில் எல்.முருகன் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 12 புதிய உறுப்பினர்கள் நேற்று பதவியேற்றுக்கொண்டனர். இதில் ராஷ்ட்ரீய ஜனதாதள எம்.பி. மனோஜ் குமார் ஜா, பா.ஜனதா எம்.பி. ஹர்ஷ் மகாஜன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

நாடாளுமன்றத்தில் நடந்த இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் புதிய உறுப்பினர்களுக்கு மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜெகதீப் தன்கர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் துணைத்தலைவர் ஹரிவன்ஷ், மாநிலங்களவை செயலாளர் பி.கே.மோடி ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story