மகாசிவராத்திரி ஊர்வலத்தில் சோகம்.. மின்சாரம் பாய்ந்து 14 சிறுவர்கள் படுகாயம்


மகாசிவராத்திரி ஊர்வலத்தில் சோகம்.. மின்சாரம் பாய்ந்து 14 சிறுவர்கள் படுகாயம்
x

ஊர்வலத்தில் ஆன்மிக கொடி கட்டப்பட்ட நீண்ட கம்பியை எடுத்துச் சென்றபோது, உயர் அழுத்த மின்கம்பியில் பட்டதால் அதன்வழியாக மின்சாரம் பாய்ந்துள்ளது.

கோட்டா:

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் மகாசிவராத்திரியை முன்னிட்டு இன்று சிவ பாரத் ஊர்வலம் நடைபெற்றது. இதில் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் சிவ பக்தர்கள் சிவ முழக்கம் எழுப்பியபடி வந்தனர். ஊர்வலம் இன்று மதியம் 12 மணியளவில் குன்ஹரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாகதோரா பகுதியில் சென்றபோது திடீரென அவர்களை மின்சாரம் தாக்கியது.

ஊர்வலத்தில் பங்கேற்ற சிறுவர்களில் ஒரு சிறுவன், உச்சியில் ஆன்மிக கொடி கட்டப்பட்ட 22 அடி நீள கம்பியை தாங்கி வந்துள்ளான். அந்த கம்மி மேலே சென்ற உயர் அழுத்த மின்கம்பியில் பட்டதால் அந்த சிறுவன் மற்றும் உடன் சென்றவர்கள் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் 14 சிறுவர்கள் உடல் கருகிய நிலையில் துடித்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு கோட்டாவில் உள்ள எம்.பி.எஸ். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ள சிறுவர்களில் 2 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது.

இதுபற்றி கோட்டா நகர எஸ்.பி. அம்ரிதா கூறுகையில், "மின்சாரம் தாக்கியதில், கொடியை பிடித்திருந்த சிறுவனுக்கு 100 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அவனை மீட்க முயன்ற மற்ற சிறுவர்களுக்கும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அதில் ஒரு சிறுவனுக்கு 50 சதவீத தீக்காயமும், மீதமுள்ள 12 சிறுவர்களுக்கு 50 சதவீதத்திற்கும் குறைவான காயமும் ஏற்பட்டுள்ளது' என்றார்.


Next Story