மங்களூரு அருகே போதைப்பொருள் விற்ற 2 பேர் கைது


மங்களூரு அருகே போதைப்பொருள் விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 28 Aug 2023 6:45 PM GMT (Updated: 28 Aug 2023 6:45 PM GMT)

மங்களூரு அருகே போதைப்பொருள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மங்களூரு-

மங்களூரு அருகே போதைப்பொருள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

போதைப்பொருள் விற்பனை

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு பகுதியில் கடந்த சில நாட்களாக போைதப்பொருள் விற்பனை அதிகரித்து வருகிறது. குறிப்பாக வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சா, எம்.டி.எம்.ஏ. உள்ளிட்ட போதைப்பொருட்களை மர்மநபர்கள் கடத்தி வந்து மங்களூருவில் விற்பனை செய்கிறார்கள்.

இதனை தடுக்கும் வகையில் போலீசார் ரோந்து பணியிலும், வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் மங்களூரு அருகே உள்ள சூரத்கல் தடம்பயல் பகுதியில் காரில் போதைப்பொருள் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சூரத்கல் போலீசார் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை போலீசார் மறித்தனர். பின்னர் காரில் இருந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

கிடுக்கிப்பிடி விசாரணை

அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரை சோதனை செய்தனர். அப்போது காரில் போதைப்பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

விசாரணையில், காட்டி பல்லா பகுதியை சேர்ந்த சகிப் (வயது 33), சொக்கப்பட்டு பகுதியை சேர்ந்த நிசார் உசேன்(34) என்பதும், இவர்கள் 2 பேரும் காரில் போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. குறிப்பாக கல்லூரி மாணவர்களை குறிவைத்து போைதப்பொருளை விற்பனை செய்துள்ளனர். இதையடுத்து அவர்கள் 2 பேரிடம் இருந்து 52 கிராம் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள், ரூ.1,800 ரொக்கம், கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சிறையில் அடைத்தனர்

அவற்றின் மதிப்பு ரூ. 5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. சகிப், நிசார் ஆகியோர் மீது வழிப்பறி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் சூரத்கல் போலீசார் மங்களூரு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story