மங்களூரு அருகே துப்பாக்கியுடன் சுற்றிய 2 பேர் கைது


மங்களூரு அருகே  துப்பாக்கியுடன் சுற்றிய  2 பேர் கைது
x
தினத்தந்தி 31 July 2023 12:15 AM IST (Updated: 31 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மங்களூரு அருகே கைத்துப்பாக்கியுடன் சுற்றிய கேரளாவை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மங்களூரு-

மங்களூரு அருகே கைத்துப்பாக்கியுடன் சுற்றிய கேரளாவை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பயங்கரவாதிகள் கைது

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 பயங்கரவாதிகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் வாக்கி-டாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் பெங்களூருவில் நாசவேலையில் ஈடுபட முயன்றது தெரியவந்தது. இதனால் மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பஜ்பே பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவா்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் மோட்டார் சைக்கிளை சோதனை செய்தனர். அதில், கைத்துப்பாக்கி இருந்தது தெரியவந்தது.

கைத்துப்பாக்கி பறிமுதல்

அவா்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவா்கள் கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் மஞ்சேஷ்வர் பகுதியை சேர்ந்த அப்பாஸ் (வயது 61), குத்தார் பகுதியை சேர்ந்த யஸ்வந்த்குமார் (45) என்பதும், அவர்கள் 2 பேரும் தற்போது உல்லால் பகுதியில் வசித்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள், ஒரு கைத்துப்பாக்கி மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அவர்களுக்கு கைத்துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். யஸ்வந்குமார், அப்பாஸ் ஆகியோர் மீது ஏற்கனவே மங்களூரு தெற்கு, கும்பலா, கேரளா மாநிலம் மஞ்சேஷ்வர் ஆகிய போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.

1 More update

Next Story