உச்சநீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகள் பகீர் புகார் மத்திய சட்ட அமைச்சருடன் பிரதமர் ஆலோசனை

உச்சநீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகள் பகீர் புகார் கூறியதை அடுத்து, பிரதமர் மோடி, மத்திய சட்ட அமைச்சருடன் விவாதித்து வருகிறார்.#SupremeCourt #PMModi
புதுடெல்லி
வரலாற்றில் முதன்முறையாக, உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் பி லோகூர் ஆகியோர் இன்று டெல்லியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது பகீர் புகார் கூறினர். அவர் முடிவுகளை தன்னிச்சையாகவே எடுக்கிறார் என்றும் மற்ற மூத்த நீதிபதிகளை கலந்து ஆலோசிப்பதில்லை என்றும் புகார் கூறினர்.
மேலும் கூறும்போது, இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத நிகழ்வாக நாங்கள் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது . இப்படியே போனால் நாட்டில் ஜனநாயகம் நிலைக்காது. உச்சநீதிமன்ற நிர்வாகம் சரியாக செயல்படவில்லை. இங்கு கடந்த சில மாதங்களாக நடக்கும் நிகழ்வுகள் ஏற்புடையதாக இல்லை. உச்சநீதிமன்றத்தை பாதுகாக்க நாங்கள் எடுத்த நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தது. எங்களது கவலைகளை நாட்டு மக்களுக்குத் தெரிவிக்கவே பத்திரிகையாளர்களை சந்தித்தோம். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்வது பற்றி நாட்டு மக்கள்தான் சிந்திக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் இப்படி பரபரப்பு குற்றச்சாட்டைக் கூறியுள்ள விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பிரதமர் மோடி, மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் புகாருக்குள்ளான உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா சற்றுநேரத்தில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.
#SupremeCourt #DipakMisra #PMModi #NarendraModi #RaviShankarPrasad
Related Tags :
Next Story