குஜராத் தொழில் அதிபர் தொடர்பாக தகவல் தெரிவிக்க நைஜீரியா இன்டர்போலிடம் சிபிஐ கோரிக்கை


குஜராத் தொழில் அதிபர் தொடர்பாக தகவல் தெரிவிக்க நைஜீரியா இன்டர்போலிடம் சிபிஐ கோரிக்கை
x
தினத்தந்தி 25 Sep 2018 12:48 PM GMT (Updated: 25 Sep 2018 12:48 PM GMT)

குஜராத் தொழில் அதிபர் தொடர்பாக தகவல் தெரிவிக்க நைஜீரியா இன்டர்போலிடம் இந்திய தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


புதுடெல்லி,


குஜராத்தின் வதோதராவை மையமாக கொண்டு இயங்கி வரும் ‘ஸ்டெர்லிங் பயோடெக்’ நிறுவனத்தின் உரிமையாளரான நிதின் சந்தேசரா பல்வேறு வங்கிகளில் இருந்து ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டு உள்ளார். இதற்காக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் 300–க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களையும், பினாமி பெயரில் நிறுவனங்களையும் பயன்படுத்தி உள்ளார். 

இந்த மோசடி தொடர்பாக ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர்களான நிதின் சந்தேசரா, சகோதரர் சேத்தன், அண்ணி தீப்திபென் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. தற்போது வெளிநாடுகளுக்கு தப்பி ஓடியிருக்கும் இவர்களை கைது செய்யவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நிதின் சந்தேசராவை துபாயில் வைத்து கடந்த மாதம் அமீரக அதிகாரிகள் கைது செய்திருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இதில் உண்மையில்லை என தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. அதேநேரம் நிதின் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

எனினும் தற்போது நிதின் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் நைஜீரியாவில் தலைமறைவாக இருக்கலாம் என தகவல் வெளியாகியது. 
நிதின் சந்தேசரா உள்ளிட்டோரை பார்த்தால் கைது செய்து நாடு கடத்துமாறு அமீரகத்துக்கு இந்தியா கடிதம் எழுதியுள்ளது. 

மேலும் அவர்களை கைது செய்வதற்காக சர்வதேச போலீசை நாடவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் நிதின் சந்தேசரா மற்றும் அவருடைய குடும்பத்தினர் எங்கிருக்கிறார்கள் என்பது தொடர்பான தகவலை தெரிவிக்க நைஜீரியா இன்டர்போலிடம், சிபிஐ தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 


Next Story